சமந்தாவின் 'மா இன்ட்டி பங்காரம்' படத்தை பாராட்டிய ருக்மணி வசந்த்!
யஷின் பிரம்மாண்ட படமான 'டாக்ஸிக்' மூலம் பான்-இந்திய அளவில் ரசிகர்களைக் கவரத் தயாராகி வருகிறார் ருக்மணி வசந்த். இந்நிலையில் தற்போது அவர் தனது ஜூன் மாத புகைப்படத் தொகுப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்பட வரிசையில், சமந்தாவின் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'மா இன்ட்டி பங்காரம்' படத்தை அவர் திரையரங்கில் ரசித்துப் பார்க்கும் ஒரு புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவான இந்த படம் ருக்மணியின் மனதை முழுமையாகக் கவர்ந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், 'ஒவ்வொரு நிமிடமும் அதற்கு தகுதியானது' என்று எளிய வரிகளில் படத்தைப் பாராட்டியுள்ளார். இந்த எளிய கமெண்ட் அவர் படத்தை எவ்வளவு ரசித்து பார்த்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.
மா இன்ட்டி பங்காரம் படம் உலகளவில் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதுடன், வெளிநாடுகளில் 2 மில்லியன் டாலர் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், 2026ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
மேலும், யஷ் நாயகனாக நடிக்கும் 'டாக்ஸிக்' என்ற பீரியட் கேங்க்ஸ்டர் படத்தில் ருக்மணி வசந்த், மெலிசா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜூலை 1ம் தேதியான இன்று, இப்படத்தின் பெண் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ஒரு மிரட்டலான டீசர் வெளியானது. அதில், நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோருடன் இணைந்து ருக்மணியும் துப்பாக்கியை நீட்டும் ஒரு அதிரடி லுக்கில் மாஸாக காட்டப்பட்டுள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், 'கே.ஜி.எப், சலார்' படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் 'டிராகன்' படத்திலும் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தை ஜூன் 11, 2027 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.