ரூ. 1.80 கோடி நிலுவைத் தொகை: நடிகர் ஆர்யா மீது ஹைதராபாத்தில் குற்றவியல் வழக்கு பதிவு!
பணத் தகராறு காரணமாக நடிகர் ஆர்யா சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் ஆர்யா மற்றும் அவரது தயாரிப்பு குழுவினர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிலிம் நகரைச் சேர்ந்த தாஹிர் சினே டெக்னிக் என்ற சினிமா உபகரணங்கள் வழங்கும் நிறுவனம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆர்யா நடிப்பில் கடந்த ஜூன் 25ல் திரைக்கு வந்த படம் 'அனந்தன் காடு'. இந்த படத்திற்காக ஆர்யாவின் குழுவினர் உயர்தர டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் பிரத்யேக விளக்கு உபகரணங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். உபகரணங்கள் அவர்களின் சொந்த செலவில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பின்னரும், படக்குழுவினர் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றும், இன்னும் ரூ.1.80 கோடி பாக்கி உள்ளதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
அனந்தன் காடு படக்குழுவினர் தரப்பில் இருந்து அச்சுறுத்தல்களும், எதிர்ப்புகளும் வந்ததை அடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. நிலுவைத் தொகையை கேட்டபோது, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத் மற்றும் கிஷோர் என்ற உதவியாளர் ஆகிய மூவரும் தங்களை மிரட்டியதாகப் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் இவர்கள் மூவர் மீதும் ஏமாற்றுதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.