ஒரு பாட்டு, ஒரு காட்சி ... செலவு மட்டும் பல கோடி...மிரள வைத்த சினிமாக்கள்
இந்தியத் திரைத்துறை, குறிப்பாகத் தமிழ் மற்றும் இந்தி சினிமா, தங்களது பிரமாண்டமான காட்சிகளுக்காக உலகப் புகழ்பெற்றவை. வெறும் சில நிமிட பாடலுக்காகவும், ஒரே ஒரு குறிப்பிட்ட காட்சிளுக்காகவும் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் வாரி இறைத்த சம்பவங்கள் பல படங்களில் நடந்துள்ளது. அப்படி ஒரே ஒரு பாடல் அல்லது ஒரே ஒரு காட்சிக்காக மட்டும் பல கோடிகளை செலவழித்த படங்களின் விபரம் இதோ...
ஒரு பாடலுக்கு கோடிகளில் செலவழித்த படங்கள் :
எந்திரன் (2010) :
செலவு- ரூ.15 கோடிக்கும் மேல்
இந்த படத்தில் வரும் 'கிளிமாஞ்சாரோ' பாடலைப் பெரு நாட்டிலுள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமும், உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சு (Machu Picchu) பகுதியில் படமாக்கினார்கள். அங்கு படமாக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் இதுவே. அங்கிருந்த பழமையான கற்களுக்குச் சேதம் ஏற்படக் கூடாது என்பதால், மேக்கப் சாதனங்கள் முதல் கேமராக்கள் வரை அனைத்தையும் படக்குழு கையிலேயே சுமந்து செல்ல வேண்டியிருந்தது. அதே போல் 'அரிமா அரிமா' பாடலுக்காகச் பிரமாண்டமான ரோபோக்கள் மற்றும் அரண்மனை செட்கள் அமைக்கப்பட்டன. படத்தில் மொத்த பட்ஜெட் ரூ.132 கோடி முதல் ரூ.150 கோடி வரை. இதில் இந்த பாடல்களுக்கு மட்டும் ரூ.15 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் :
செலவு- 5 பாடல்களுக்கு மட்டும் ரூ.90 கோடி (ஒரு பாடலுக்கு தோராயமாக ரூ.15 - ரூ.20 கோடி)
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள இப்படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடலில் மட்டும் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பாரம்பரிய நடனக் கலைஞர்கள் ஆட வைக்கப்பட்டனர். ஒரே பாடலில் இத்தனை நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைத்துப் படமாக்கியது இந்திய சினிமாவிலேயே ஒரு புதிய சாதனை.
பத்மாவத் (2018) :
செலவு: ரூ.12 கோடிக்கும் மேல்
ராஜஸ்தானின் சித்தோர்கார் கோட்டைக்குள் இருக்கும் ராஜபோகக் கண்ணாடி அரண்மனையைப் போலவே தத்ரூபமாக ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டது. இதை உருவாக்க 40 நாட்கள் ஆயின. இந்த பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ராஜஸ்தானி பாரம்பரிய ஆடை மற்றும் தங்க நகைகளின் எடை மட்டுமே 30 கிலோ. இந்த கனமான ஆடையை அணிந்து கொண்டு தீபிகா 66 முறை சுழன்று ஆடும் 'கூமர்' நடனத்தை ஆடிப் படமாக்கினர்.
ஒரே காட்சிக்குக் கோடிகளை வாரி இறைத்த சினிமாக்கள்:
சாஹோ: கார் சேஸிங் காட்சி
செலவு- ரூ.70 கோடி (வெறும் 8 நிமிடக் காட்சிக்கு)
'ட்ரான்ஸ்பார்மர்ஸ், டை ஹார்ட்' போன்ற ஹாலிவுட் படங்களுக்குச் சண்டை அமைத்த கென்னி பேட்ஸ் தலைமையில் இந்த படத்தில் வரும் கார் சேஸிங் காட்சி அபுதாபியில் படமாக்கப்பட்டது. கிராபிக்ஸ் (VFX) ஏதும் பயன்படுத்தாமல், உண்மையான கார்களை நொறுக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருந்தது. அதற்காக 37 ஆடம்பர கார்கள் (Audi, BMW) மற்றும் 5 பிரமாண்ட டிரக்குகள் நிஜமாகவே இடித்து நொறுக்கப்பட்டன.
ஆர்ஆர்ஆர்: இடைவேளைக் காட்சி
செலவு- ரூ.45 கோடி
பிரிட்டிஷ் அரண்மனைக்குள் ஜூனியர் என்.டி.ஆர் காட்டு விலங்குகளை லாரியிலிருந்து திறந்துவிடும் காட்சி இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இடைவேளைக் காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் காட்சியைத் தொடர்ச்சியாக 50 நாட்கள் இரவில் மட்டுமே படமாக்கினார்கள். இதில் வந்த புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகள் அனைத்தும் கணினி தொழில்நுட்பத்தால் (CGI/VFX) உருவாக்கப்பட்டவை. இதற்காக உலகத்தரம் வாய்ந்த VFX நிறுவனங்கள் பல மாதங்கள் உழைத்தன.
2.0 : மைதானக் கிளைமாக்ஸ்
செலவு- ரூ. 54 கோடி
சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடப்பது போன்ற இந்தக் காட்சியில் ஆயிரக்கணக்கான மொபைல் போன்கள் சேர்ந்து ஒரு ராட்சசப் பறவையாக மாறும். 3D தொழில்நுட்பத்தில் நேரடியாகப் படமாக்கப்பட்ட இக்காட்சியின் காட்சிப் பிழைகளைத் திருத்தவும், 3D எபெக்ட்ஸ் கொடுக்கவும் மட்டுமே உலக அளவில் 1,000க்கும் மேற்பட்ட VFX கலைஞர்கள் பணியாற்றினர்.
முகல்-இ-அசாம் (1960)
பாடலின் பெயர்: பியார் கியா தோ டர்னா கியா
திரைப்படம்: முகல்-இ-அசாம் (Mughal-e-Azam)
செட் செலவு- ரூ.15 லட்சம் (1960-ல்) (இன்றைய மதிப்பில் ரூ.100 கோடிக்கும் மேல்!)
ஷீஷ் மஹால் (Mughal Sheesh Mahal): ஆக்ராவில் உள்ள நிஜமான கண்ணாடி அரண்மனையைப் போலவே 'செட்' அமைக்க இயக்குநர் கே.ஆசிப் விரும்பினார். அதற்காக பெல்ஜியத்திலிருந்து உயர்தரக் கண்ணாடிகள் இறக்குமதி செய்யப்பட்டு, ஜெய்ப்பூரைச் சேர்ந்த கைவினைஞர்களால் 2 ஆண்டுகள் இரவும் பகலுமாக உருவாக்கப்பட்டது இந்த மாளிகை. கண்ணாடிகள் அதிகம் இருந்ததால் கேமரா விளக்குகளின் வெளிச்சம் பிரதிபலித்து படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதற்காக கேமராக்களுக்கு முன்னால் மெழுகுவர்த்திகளையும், பிரத்யேக துணிகளையும் வைத்து ஒளியைக் கட்டுப்படுத்திப் படமாக்கினார்கள். அந்த காலகட்டத்தில் 'முகல்-இ-அசாம்' படம் கருப்பு-வெள்ளையில் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஒரு பாடலின் பிரமாண்டத்தைக் காட்டுவதற்காக மட்டும் லண்டனிலிருந்து பிரத்யேக 'டெக்னிகலர்' பிலிம் வரவழைக்கப்பட்டு வண்ணமயமாகப் படமாக்கப்பட்டது.