பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்குத்தானே கன்னத்தில் அறைந்து கொண்ட நடிகர்
தெலுங்கில் இளம் நடிகர்கள் நடிப்பில் மீடியம் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் 'ஹுசாரு பிட்டலு'. அறிமுக இயக்குனர் பிக்சு கோயகுரா இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புட்டா பானு என்கிற நடிகர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தனக்குத்தானே கன்னத்தில் பலமுறை அறைந்து கொண்டார். இதனால் பத்திரிகையாளர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு கண்ணீர் மல்கப் பேசிய அந்த நடிகர், சினிமாவில் நுழைவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளாக பட்ட கஷ்டங்களையும் எதிர்கொண்ட அவமானங்களையும் நினைவு கூர்ந்து, என்னுடைய போராட்டம் இப்போது எனக்கு சாத்தியமாகி இருக்கிறது. பெரிய திரையில் என்னை நானே பார்த்துக் கொள்வதை என்னால் நம்ப முடியவில்லை. இது கனவா இல்லை நிஜமா என என்னை கிள்ளிப் பார்ப்பதற்குப் பதிலாக என்னை நானே கன்னத்தில் அறைந்து கொண்டேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அவருக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார்கள். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.