படப்பிடிப்பில் சவுகார் ஜானகி தானே சமைத்து எங்களுக்கு ஊட்டி விடுவார் : இயக்குனர் நந்தினி ரெட்டி
தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகை சவுகார் ஜானகி தனது 94வது வயதில் நேற்று காலமானார். இதனைத் தொடர்ந்து திரையுலகினர் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள சவுகார் ஜானகி கடந்த 2023-ல் தெலுங்கில் வெளியான 'அன்னி மஞ்சி சகுனமுலே' என்கிற படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான 'மா இண்டி பங்காரம்' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். சவுகார் ஜானகியுடன் தான் பணியாற்றிய அனுபவங்களையும் புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நந்தினி ரெட்டி.
இதில் அவர் கூறும்போது, இந்திய சினிமாவில் பெருமைக்குரிய இந்த மூத்த பெண்மணி. நான் இதுவரை பணியாற்றியவர்களில் மிகவும் பாசமான மற்றும் சிறந்த தொழில்முறை கலைஞர். அவர் படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் பல கதைகளைக் கூறுவார்; தானே சமைத்து எங்களுக்கு ஊட்டி மகிழ்வார். அதே நேரத்தில் தனது வேலையையும் மிகத் துல்லியமாக, நேர்த்தியாக செய்வார். அவரது வாழ்நாளில் ஒரு சிறிய பகுதியைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்று நந்தினி ரெட்டி கூறியுள்ளார்.