PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:00 AM

தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: 'லஞ்சம், அனுமதி அளிக்க தாமதம் போன்ற காரணங்களால் கடந்த தி.மு.க., ஆட்சியில், 3.30 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்தில் இருந்து வெளியேறி விட்டன' என, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார். 'செமிகண்டக்டர்' நிறுவன முதலீடு, தானாக குஜராத் செல்லவில்லை. மத்திய அரசால் திட்டமிட்டு, தமிழகத்தில் இருந்து பறிக்கப்பட்டது.
டவுட் தனபாலு: தொழில் முதலீட்டை குஜராத்துக்கு மத்திய அரசு கடத்திட்டு போயிட்டதா குற்றம்சாட்டுறீங்களே... தொழில் முதலீடுகள் வந்தா மட்டும், 'எங்களது முயற்சியால் வந்துச்சு'ன்னு பெருமை அடிக்கிறதும், வராம போயிட்டா, அரசியல் ரீதியா குற்றச்சாட்டு சுமத்துவதையும், எதிர்க்கட்சியான பின்னரும் நீங்க நிறுத்தலையா என்ற, 'டவுட்'தான் வருது!
---
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: பா.ஜ., தேசிய கட்சி; எந்த ஒரு நபரின் வருகையும், வெளியேற்றமும் பா.ஜ.,வை ஒருபோதும் பாதிக்காது. தமிழக வெற்றிக் கழகம் போல் பா.ஜ., ஏனோதானோ கட்சி அல்ல. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் பா.ஜ., தான் நாட்டை ஆளும் கட்சியாக இருக்கும். அடுத்து நடக்கும் தேர்தலில் த.வெ.க., இருக்குமா என தெரியாது.
டவுட் தனபாலு: தேசிய அளவில் பா.ஜ., பலமான கட்சிதான் என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனா, உங்களுக்கு முன்னாடி முருகன், அண்ணாமலை தலைவர்களா இருந்தப்ப, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இருந்த எழுச்சியும், வரவேற்பும் இப்பவும் இருக்குதா... அடுத்த தேர்தலில் த.வெ.க., இருக்கும்... ஆனா, பா.ஜ., மாநில தலைவர் பதவியில் நீங்க இருப்பீங்களா என்பது, 'டவுட்'தான்!
---
தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர்: எங்கள் ஆட்சியில், 'டெண்டர்' எடுத்தவர்களிடம், கட்சி நிதி வசூலித்ததாக த.வெ.க., அரசு கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இருந்தால் வெள்ளை அறிக்கை போல வெளியிடுங்கள். இதற்காக, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுக்க தயாராக இருக்கிறீர்களா; தொடுத்து பாருங்கள்.
டவுட் தனபாலு: அது சரி... உண்மையாகவே கட்சிக்கு நிதி வசூலிக்காம நேர்மையா ஆட்சி நடத்தினீங்களா அல்லது அதுக்கான எந்த ஆதாரங்களையும் விட்டு வைக்காம துடைச்சு எடுத்துட்டோம் என்ற துணிச்சலில், இப்படி சவால் விடுறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
