PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிட்ட விஜய பிரபாகரன் பேச்சு:
லோக்சபா
தேர்தலில் இந்தியா முழுதுமே ஓட்டு எண்ணிக்கை நடந்து உடனுக்குடன் தேர்தல்
முடிவு அறிவிக்கப்பட்டது. ஆனால், விருதுநகர் தொகுதியில் மட்டுமே மிகவும்
தாமதமாக முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் சதி செய்து என்னை
தோற்கடித்து விட்டனர்.
ஓட்டு எண்ணிக்கையில் மட்டும் தான் சதியா... கூட்டணி கட்சிகள் எல்லாம் நல்லா தான் வேலை பார்த்தாங்களா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக பொறியியல் கல்லுாரி அனுமதி தர வரிசையின்படி, 1.90 லட்சம் மாணவர்களில், 65 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வில், 23 லட்சம் மாணவர்களில், 67 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது, எப்படி இத்தனை பேர் முழு மதிப்பெண் பெற்றனர் எனக் கேள்வி கேட்டவர்கள், இப்போது வாய்மூடி மவுனம் காப்பர்.
எல்லாம், 'எனக்கு வந்தால் ரத்தம்; உனக்கு வந்தால் தக்காளி சட்னி' என்ற கதை தான்!
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேட்டி: கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றிய நேரத்தில், 'நான் கன்னடன்' என சொல்வதில் பெருமைப் படுகிறேன் என்றார். அவர், ஐ.பி.எஸ்., அதிகாரி பதவியை ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம்; அவர் ராஜினாமா செய்ய வில்லை என்றால் அடுத்த நாள் சிறை சென்றிருக்க நேரிட்டிருக்கும். ஐ.பி.எஸ்., பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை என்றால் நான் சொல்ல வேண்டியது வரும்.
பயங்கரமான உளவுத்துறையா இருப்பார் போலிருக்கே... விரல் நுனியில் தகவல் வைத்திருக்கும் இவரை பார்த்து தமிழக உளவுத் துறை கத்துக்கணும்!
பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி: எந்தெந்த நேரத்தில், என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதை பொதுச்செயலர் பழனிசாமி சரியாக எடுக்கிறார். அ.தி.மு.க.,வுக்கு தொடர்ந்து தோல்வி என்று சொல்ல முடியாது. கடந்த 2011 முதல் 2021 வரை தி.மு.க., எங்கு இருந்தது என தெரியாமல் இருந்தது. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று தான்.
அடுத்த சட்டசபை தேர்தலில் தோற்றாலும், 'தி.மு.க., தொடர்ந்து பத்தாண்டு ஆட்சியில் இல்லாமல் தான் இருந்தது'ன்னும் சால்ஜாப்பு சொல்லலாம்!