PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா பேச்சு: தமிழகத் திற்கு நிதி
ஒதுக்காததால் தான் நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின்
புறக்கணித்துள்ளார். தீர்க்கமாக சிந்தித்து தான் இந்த முடிவை
எடுத்துள்ளார். மத்திய அரசு அனைத்து மாநிலத்தையும் ஒன்றாக பார்க்க
வேண்டும். எல்லாம் நல்லதுக்கு தான். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், பா.ஜ.,
வெற்றி பெறாததால் தமிழகத்தை புறக்கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில்
தமிழகத்தில் 234 தொகுதியையும் தி.மு.க., கைப்பற்றும்.
ஒருவேளை
தேர்தல் களம் அப்படி தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்தால் கூட, கடைசி
நேரத்துல ஏடாகூடமா பேசி ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்க இவர் ஒருவர் போதாதா?
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேச்சு: குழந்தைகளுக்கு தரமான சீருடை வழங்க வேண்டும் என்பதற்காக கல்வி, கைத்தறி, துணிநுால் மற்றும் சமூக நலத்துறை ஆகியவை இணைந்து சீருடை வழங்குகிறது. தமிழகம் முழுதும் அடுத்த வாரத்திற்குள் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும்.
பள்ளி திறந்து ரெண்டு மாசமாகியும் இன்னுமா சீருடையை தைக்குறாங்க... அதை எல்லாம் நேரத்துக்கு கொடுக்க வேண்டாமா மேடம்?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம்அறிக்கை: துப்புரவு தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் நவீன திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., அரசு முன் வரவில்லை. கடலுாரில் தொழிலாளி ஒருவர் தன் முகத்தை கழிவு நீருக்குள் மூழ்கி, மனிதக்கழிவுகளை அள்ளிய அவலம் நடந்துள்ளது. குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது பழைய மாடல். மலம் கலந்த சாக்கடையில் மனிதனை இறக்கி விட்டது தான் திராவிட மாடல்?
கழிவுநீர் அடைப்பை நீக்கும் மத்திய அரசோட நவீன திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்காங்கன்னு விபரம் இருக்கா?
பா.ம.க., நிறுவனர்ராமதாஸ்: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, 1,200 டிரைவர், கண்டக்டர்களை, குத்தகை முறையில் நியமிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. தொழிலாளர் உழைப்பை மதித்து, அதற்கேற்ற ஊதியத்தையும், சமூக பாதுகாப்பையும் வழங்க வேண்டிய அரசே அவர்களின் உழைப்பை சுரண்டி, சமூக நீதியை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது. தி.மு.க.,வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
லோக்சபா தேர்தலுக்கு முன் இப்படி தான் பலமுறை சொன்னீங்க... ஆனால், தேர்தல் முடிவில் உண்மையில் பாடம் கற்றது யார்?