PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:58 AM

நாட்டு மாடுகளின் கழிவுகளில் மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும், விழுப்புரம் மாவட்டம், சாணாந்தோப்பு கிராமத்தை சேர்ந்த, 40 வயது இரட்டையர்களான தருண்குமார் மற்றும் வருண்குமார்:
தருண்குமார்: நாங்கள் இருவருமே கணினி அறிவியல் பட்டதாரிகள். ஆரம்பத்தில், 'ஆட்டோ மொபைல்ஸ்' மற்றும் மளிகை சார்ந்த தொழில் செய்து வந்தோம்.
எங்களுக்கு இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டதால், 2016ம் ஆண்டில் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரைகள், காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறோம்.
இயற்கை விவசாயத்தில் விளைந்தவை என்பதால், உடனே விற்பனை ஆகிவிடும். நம் முன்னோரின் தற்சார்பு விவசாயத்தில், நாட்டு மாடுகள் பெரும்பங்கு வகித்தன. அதை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 10 நாட்டு மாடுகள் வாங்கினோம்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால், மாடுகளின் கழிவுகளை மதிப்பு கூட்ட முடிவெடுத்து, கூடுதலாக 1.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, மாட்டு பண்ணை ஆரம்பித்தோம்.
தற்போது எங்களிடம், 125 நாட்டு மாடுகள் இருக்கின்றன. லாப நோக்கமின்றி மாட்டு பண்ணை நடத்துவதால், செலவு குறித்து கவலைப்படுவதில்லை. மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனங்களையும் நாங்களே சாகுபடி செய்கிறோம்.
வருண்குமார்: எப்போதும், 30 மாடுகள் வரை கறவையில் இருக்கும். தினமும், 90 லிட்டர் பால் கிடைக்கிறது. குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு மட்டுமே, ஒரு லிட்டர் 90 ரூபாய் என விற்பனை செய்கிறோம்.
மூலிகை பூச்சி விரட்டி, பஞ்சகவ்யா போன்ற இடுபொருட்கள், மாட்டு சாணத்தில் தயார் செய்த வறட்டி, மண்புழு உரம், விபூதி, குங்குமம், கொசு விரட்டி என அனைத்தையும் கலப்படமின்றி தயாரித்து, நியாயமான விலைக்கு விற்பனை செய்கிறோம்.
இங்கு தயாராகும் அனைத்து பொருட்களுக்கும் சந்தை வாய்ப்பு நன்கு இருப்பதால், விற்பனைக்கு கவலை இல்லை. சமூக ஊடகங்களில் எங்கள் தயாரிப்புகளை பதிவிடுவதால், தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலும் எங்களுக்கு தொடர் வாடிக்கையாளர்கள் பலர் உள்ளனர்.
எங்களிடம் ஆறு பேர் பணிபுரிகின்றனர். பால் விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை வாயிலாக ஓரளவு வருமானம் வருகிறது. அது கொஞ்சம் கைகொடுக்கிறது. மற்ற செலவுகளுக்கு கைப்பணத்தை தான் செலவு செய்கிறோம்.
நாட்டு மாடுகளை ஆத்ம திருப்திக்காக தான் வளர்க்கிறோம். அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை!
தொடர்புக்கு:
99949 11234
