Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/பாடாத பாட்டெல்லாம் பாட வந்தோம்! - ஆட்டிசம் குழந்தைகளின் கச்சேரி

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தோம்! - ஆட்டிசம் குழந்தைகளின் கச்சேரி

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தோம்! - ஆட்டிசம் குழந்தைகளின் கச்சேரி

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தோம்! - ஆட்டிசம் குழந்தைகளின் கச்சேரி

PUBLISHED ON : ஜூன் 09, 2024


Google News
Latest Tamil News
சென்னை கடற்கரையை ஒட்டியமைந்த, அந்த சிற்றரங்கத்தில் இருந்து, பழைய, புதிய பாடல்கள் காற்றில் தவழ்ந்து வந்து, காதுக்கு இனிமை சேர்த்தது.

யார் இந்தப் பாடல்களை எல்லாம் பாடுவது என, எட்டிப் பார்த்த போது, 10 முதல் 20 வயது வரையிலான, 'ஆட்டிசம்' பாதித்த ஆண், பெண் குழந்தைகள் பாடிக் கொண்டிருந்தனர்.

இந்த மாதிரி பாதிப்பு உள்ள குழந்தைகளை, ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வைப்பதே முடியாது. ஆனாலும், அவர்களை அமைதியாக நிற்க வைத்து, பாட வைப்பது அசாத்தியமான விஷயமாகப் பட்டது.

இசை மேதை டி.ஆர்.மகாலிங்கத்தின் பேத்தியும், பாடகியுமான பிரபா குருமூர்த்தி சென்னையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரத்தத்தில் ஊறிய இசையை விட்டுவிடாமல் மேடைக் கச்சேரி களையும் வழங்கி வருகிறார்.

'கொரோனா' தொற்று சமயத்தில், 'ஆன்லைன்' மூலமாக பாட்டு வகுப்பு நடத்தி வந்தார். அப்போது, 'நார்மல் குழந்தைகளுக்கு தான் பாட்டு சொல்லித் தருவீர்களா... எங்கள் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லித் தரமாட்டீர்களா?' என்று, 'ஆட்டிசம்' பாதித்த குழந்தைகளின் பெற்றோர் சிலர் கோரிக்கை வைத்தனர்.

'அவர்கள் கடவுள் தந்த செல்லங்கள் ஆயிற்றே... தாராளமாக பாட்டு சொல்லித் தருகிறேன்...' என்று, பாட்டு சொல்லித்தர முன்வந்தார்.

'கொரோனா காலம் முடிந்ததும், அவர்களை ஒரு இடத்தில் வரவழைத்து பாட்டுப் பயிற்சி வழங்கினேன். ஆரம்பத்தில் அவர்களை கையாள்வது மிகவும் சிரமமாக இருந்தாலும், போகப் போக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

'மேலும், பாட்டு அவர்களின் மனதிற்கும், உடம்பிற்கும் மருந்தாக மாறியது; 'ஆட்டிசம்' பாதிப்பு குறைந்தது. இதனால், சிரமம் பாராமல் தங்கள் குழந்தைகளை பாட்டு வகுப்பில் தொடர்ந்து பங்கேற்க வைத்தனர், பெற்றோர்.

'இக்குழந்தைகளில் பலருக்கு எழுத, படிக்கத் தெரியாது. தங்களுக்கு எந்தப் பாடல் பிடிக்கிறதோ, அந்தப் பாடலை மட்டும் மனப்பாடமாக்கிக் கொண்டு, கரோக்கி - மொபைல் போனில் வரும் இசைப் பின்னணியை வைத்து பாடும் முறையில் பாடி வருகின்றனர்.

'ஒரு குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று பாடல்கள் என்று, 10 முதல் 20 குழந்தைகளை மேடையேற்றி, 'டிஆர்எம் சூர்யாஸ் ரிதம்ஸ்' என்ற பெயரில் பல இடங்களில் பாட வைத்து வருகிறேன்.

'உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு சின்ன சின்ன விசேஷங்களில், குழந்தைகள் பாடி வருகின்றனர். குழந்தைகளை பாராட்டும் போது, ஆனந்த கண்ணீர் விடுவர், பெற்றோர். அதைப் பார்க்கும் போது, என, மனம் சந்தோஷம் கொள்கிறது.

'இதுவரை, நுாறு இடங்களில் பாடியுள்ளனர். பின்னணி இசைக் கலைஞர்களின் உதவியோடு, பெரிய மேடைகளில், இந்த குழந்தைகளை பாட வைக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. அந்தக் கனவு விரைவில் நனவாக வேண்டும்...' என்று கூறும் பிரபாவிடம் பேசுவதற்கான எண்: 89391 - 17387.

- எம். ராகவேந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us