/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: நடனத்தின் பெயர் சதுரம்!
/
விசேஷம் இது வித்தியாசம்: நடனத்தின் பெயர் சதுரம்!
PUBLISHED ON : மே 03, 2026

மே 9 சித்திரை திருவோணம்
ப ரதம், குச்சுப்புடி மற்றும் கதகளி போன்ற நடனங்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். சதுரம் என்ற நடனம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? இதைப்பற்றி தெரிந்து கொள்ளும் முன், நமக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் என்ற வித்தியாசமான தகவல் பற்றி அறிவோம்...
பெரிய கோவில்களில் பெரும்பாலும், ஆறு கால பூஜை நடக்கும். அதிகாலையில் கோவில் திறந்ததும் 5:00 - 6:00 மணிக்குள் நடப்பது, உஷத் கால பூஜை. இதையடுத்து, காலை 8:00- - 9:00 மணிக்குள் நடப்பதை, காலசந்தி என்பர். பகல், 12:00 - 1:00 மணிக்குள் நடப்பது, உச்சிகாலம் எனப்படும், மதிய பூஜை. மாலை 6:30 மணியளவில் நடப்பது சாயரட்சை எனப்படும், மாலை நேர பூஜை. இரவு 7:30 - -8:30க்குள் நடப்பது, இரண்டாம் காலம் எனப்படும், இரவுகால பூஜை. இதையடுத்து இரவு 9:00 - 10:00 மணிக்குள் நடப்பது, அர்த்தஜாமம் என்னும், பள்ளியறை பூஜை.
ஆண்டு முழுவதும் நாம் இத்தனை பூஜையையும் நடத்துகிறோம். தேவர்களும், சிவனின் வடிவான நடராஜருக்கு, ஆறு கால பூஜை நடத்துகின்றனர். அவர்கள் ஆடி முதல் மார்கழி வரை உறக்கத்தில் இருப்பர். தை மாதம் விழிக்க உள்ள நிலையில், மார்கழி கடைசியிலேயே எழுந்து விடுவர். தினமும் காலை 6:00 மணிக்கு எழும் பழக்கம் உள்ளவர், 5:30 மணிக்கே விழித்து எழ தயாராவார் இல்லையா! அதுபோல் தான் இதுவும்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று முதல் பூஜை, மாசி மா தம் வளர்பிறை சதுர்த்தசி திதியன்று காலையில் கால சந்தி பூஜை, சித்திரை திருவோண நட்சத்திரத்தன்று உச்சிகால பூஜை, ஆனி உத்திரம் நட்சத்திரத்தன்று சாயரட்சை என்னும் மாலை பூஜை, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியன்று இரவில் முதல் கால பூஜை, புரட்டாசி மாத சதுர்த்தசியன்று இரவில் அர்த்தஜாம பூஜை என, நடத்துவர், தேவர்கள்.
இப்போது புரிகிறதா! நம் 365 நாட்களையும், தேவர்கள் ஒரே நாளாகக் கருதுவது!
இத்தகைய சிறப்பு மிக்க நடராஜர் பல வகை நடனங்களை ஆடுகிறார். அதில் ஒன்று தான், சதுர தாண்டவம். கால்களை சதுரம் போல் குவித்து, ஆடும் இந்த நடனத்தைத் தான், அவரது ஆட்டத்தின் துவக்கநிலை. இதில், அவரது முகம் சாந்தமாக இருக்கும். பார்த்தவுடனேயே இதே அமைதி, வாழ்வில் நமக்கும் கிடைக்காதா என்ற ஏக்கம் ஏற்படும். இவ்வகை நடனத்தை சிற்பிகள் சிலையாக வடித்துள்ளனர். அவற்றில் சிலவற்றில், முயலகன் என்ற அரக்கன் இல்லை. சிலவற்றில், முயலகன் இருக்கிறான்.
இந்த சிலைகள் ஒரு சில கோவில்களில் மட்டுமே உள்ளன. திருச்சி வயலுார் முருகன் கோவிலில் உள்ள நடராஜர் சிலையில், முயலகன் இல்லை. மிக சாந்தமான நடராஜர் திருக்கோலம் இது. மற்ற தலங்களிலுள்ள நடராஜரைப் போல், கால்களை துாக்கி ஆடாமல், ஊன்றி இருப்பது இதன் விசேஷம்.
சித்திரை திருவோணத்தன்று, நடராஜருக்கு உச்சிக்கால பூஜை விசேஷம். இதைக் கண்டுகளித்து, அவரது நல்லருளைப் பெறுவோம்.
தி.செல்லப்பா

