ADDED : மே 04, 2026 10:55 PM

- நமது நிருபர் -:
உடுப்பி மாவட்டம் ஷிரியரா கிராமத்தில் கல்லு கணபதி கோவில் உள்ளது. இது, ஒரு பழமையான குகை கோவிலாகும். கோவிலைச் சுற்றி ஏராளமான மரங்கள் இருக்கின்றன. கோவில் கருவறையில் லிங்க வடிவில் சிவன், பார்வதி தேவி, வெள்ளி கவசத்தில் கணபதியும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
வெள்ளி கவசத்தில் நான்கு கைகளுடன் கணபதி காட்சி தருகிறார். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை கணபதியிடம் முன்வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக துலாபாரம் செய்கின்றனர்.
இங்கு விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கின்றனர். அனைத்து பக்தர்களுக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு இடவசதி உண்டு.
கணபதிக்கு அதிகாலை, 5:00; மதியம் 1:00; இரவு 8:30 மணி என, ஒரு நாளைக்கு மூன்று முறை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். பால், சர்க்கரை, பருப்பு, தேன் கலந்த பிரசாதம் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும்.
எப்படி செல்வது?
பஸ்: முதலில் உடுப்பி பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து பஸ் மூலம் கோவிலை அடையலாம்.
ரயில்: முதலில் உடுப்பி ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.





