Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பைரதி பசவராஜை கைது செய்ய அனுமதி ஐகோர்ட்டில் கர்நாடக அரசு கோரிக்கை 

பைரதி பசவராஜை கைது செய்ய அனுமதி ஐகோர்ட்டில் கர்நாடக அரசு கோரிக்கை 

பைரதி பசவராஜை கைது செய்ய அனுமதி ஐகோர்ட்டில் கர்நாடக அரசு கோரிக்கை 

பைரதி பசவராஜை கைது செய்ய அனுமதி ஐகோர்ட்டில் கர்நாடக அரசு கோரிக்கை 

ADDED : செப் 24, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை கைது செய்ய அனுமதிக்கும்படி, உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு பாரதிநகரில் வசித்தவர் சிவகுமார், 46. ரவுடியான இவர், ஜூலை 15ம் தேதி, வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் உட்பட 5 பேர் மீது பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின், கொலையில் தொடர்புடைய கூலிப்படையினர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவான வழக்கின் முதல் குற்றவாளியான பைரதி பசவராஜ் ஆதரவாளர் ஜெகதீசும் கைதானார்.

இதற்கிடையில், வழக்கு தொடர்பாக மூன்று முறை, பைரதி பசவராஜ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசியல் காரணங்களுக்காக தன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; வழக்கை ரத்து செய்யும்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பைரதி பசவராஜ் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடக்கிறது.

முந்தைய விசாரணையின்போது, பைரதி பசவராஜை வலுக்கட்டாயமாக கைது செய்ய நீதிபதி அருண் தடை விதித்தார்.

நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷ், ''சிவகுமார் கொலை வழக்கில், போலீஸ் தரப்பு கூடுதல் ஆதாரங்களை திரட்டி உள்ளது. விசாரணைக்கு ஆஜரானபோது, மனுதாரர், போலீசிடம் தவறான தகவல்களை வழங்கி உள்ளார். அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அவரை வலுக்கட்டாயமாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்,'' என்றார்.

இதற்கு பைரதி பசவராஜ் வக்கீல் சந்தேஷ் சவுதா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் வாதிடுகையில், ''ஒரு மாதமாக என் மனுதாரரை, போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை.

இதற்கு முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, தவறாமல் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அவரை கைது செய்ய அனுமதி கேட்பது சரியல்ல,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண், மனு மீதான அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதற்குள் மனுதாரர் தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us