Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உணவு மேளாவில் பட்டையை கிளப்பும் 'மினி' பாரத விலாஸ்

உணவு மேளாவில் பட்டையை கிளப்பும் 'மினி' பாரத விலாஸ்

உணவு மேளாவில் பட்டையை கிளப்பும் 'மினி' பாரத விலாஸ்

உணவு மேளாவில் பட்டையை கிளப்பும் 'மினி' பாரத விலாஸ்

ADDED : செப் 25, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
உணவு என்றால் அதுவும் அசைவம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. தசரா உணவு மேளாவில் வழக்கம் போல் மூங்கில் பிரியாணி, வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மைசூரு தசராவுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணியர் சாமுண்டீஸ்வரியை தரிசிக்கவும், மின் விளக்கு அலங்காரங்களை பார்க்கவும், விதவிதமான உணவு வகைகளை ருசிக்கவும் வருகை தருகின்றனர்.

தசரா உணவு துணை கமிட்டி சார்பில் நடப்பாண்டு மைசூரு மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் உணவு மேளா நடந்து வருகிறது.

மைசூரு புளியோதரை, மேலுகோட்டே புளியோதரை, முல்பாகல் தோசை, மைசூரு பிரியாணி, ஹொஸ்கோட் தம் பிரியாணி, சிக்பேட் பிரியாணி, உத்தர கர்நாடகாவின் சோள ரொட்டி, பாகல்கோட் சோள ரொட்டி, தாவணகெரே வெண்ணெய் தோசை, பங்கார்பேட் பானிபூரி, வட மாநில உணவுகளான கோலாபுரி பேல் என, 'மினி இந்திய சைவ உணவு வகைகள்' இடம் பெற்றுள்ளன.

மூங்கில் பிரியாணி மற்றொரு புறம் நாட்டுக்கோழி பிரியாணி, மாண்டியா நாட்டு புலாவ், வாழை இலை மட்டன் தம் பிரியாணி, மூங்கில் பிரியாணி, கடல் உணவுகளான மீன், மீன் கபாப், மீன் பிங்கர் பிரை, நண்டு, இறால் உள்ளிட்ட அசைவ உணவுகளும் இருக்கின்றன. இதில், பழங்குடி மூங்கில் பிரியாணி மிகவும் பிரபலம்.

இதுகுறித்து கிருஷ்ணப்பா என்பவர் கூறியதாவது:

மனிதனின் ஆரம்ப நாட்களில் உண வு தயாரிக்க பாத்திரங்கள் எதுவும் கிடையாது. அந்த காலத்தில் பழங்குடி மக்கள், தங்கள் வசிப்பிடத்தின் வனப்பகுதியில் கிடைக்கும் மூங்கிலை பயன்படுத்தி உணவு தயாரித்தனர். இது ஆரோக்கியமான உணவாக இருந்தது. இப்போது மைசூரு தசரா உணவு மேளாவில், அத்தகைய உணவு தயாரிக்கப்படுகிறது.

வனப்பகுதியில் கிடைக்கும் பச்சை மூங்கில்கள் கொண்டு வரப் படுகின்றன. அவை பல்வேறு அளவுகளில் வெட்டப்படுகின்றன. அதன் உள்ளேயும், வெளியேயும் நன்றாக சுத்தம் செ ய்யப்படுகின்றன.

அரிசி, தண்ணீர், இறைச்சி, காட்டு மிளகாயில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள், பிற பொருட்கள் மூங்கிலின் அளவுக்கு ஏற்ப சேர்க்கப்படுகின்றன.

அரைமணி நேரம் தீயில் சமைக்கப்படுகின்றன. பின் வேகவைத்த மூங்கிலை, வெளியே எடுத்து பத்து நிமிடம் ஆற வைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மூங்கிலுக்குள் இருக்கும் பிரியாணி வெளியே எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புளியோதரை பவுடர் இது தவிர, மைசூரு, மாண்டியா மக்களுக்கு மிகவும் பிடித்தமான புளியோதரை சாதம். இந்த உணவை வீட்டில் தயாரித்தால், அதற்கு தொட்டுக் கொள்ள, 'கொஜ்ஜு எனும் மசியல்', புளியோதரை பவுடரும் விற்பனை செய்யப்படுகிறது.

மைசூரு மக்களுக்கு உள்ளூர் சாப்பாட்டை விட, வெளி மாவட்ட உணவுகளை 'டேஸ்ட்' செய்வதில் அலாதி பிரியம். தசராவுக்கு வந்த சுற்றுலா பயணியர், முல்பாகல் தோசைக்காக நீண்ட வரிசையில் நின்று வாங்கி சாப்பிடுகின்றனர்.

உள்ளூரை சேர்ந்த பலர், தோசைக்கு அடிமையாகிவிட்டனர் போலும். தொடர்ந்து சாப்பிடுவதாக தெரிவித்தனர்.

தோசைக்கு வழங்கப்படும் சட்னியின் ருசிக்கு மயங்கிய பலர், எவ்வாறு செய்வது என்று கைப்பக்குவம் கேட்பதாக, கடையின் பணியாளர்கள் தெரிவித்தனர்.

கை கழுவ வசதியில்லை!

வாடிக்கையாளர்களை கவருவதற்காக தங்களின் உணவு ஸ்டால்களை வித்தியாசமான முறையில் கடை உரிமையாளர்கள் வடிவமைத்துள்ளனர். மைதானத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள, ஒவ்வொரு உணவு ஸ்டால் அருகிலும் மைசூரு மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். ஆயினும், கைகளை கழுவும் வசதி இல்லாததால், வாடிக்கையாளர்கள், குப்பை தொட்டியில் தட்டுகளை வீசிவிட்டு, அதிலேயே கைகளை கழுவி விடுகின்றனர். இதனால் மாநகராட்சி ஊழியர்கள் கடுப்பாகி உள்ளனர். குப்பையை அள்ளிச் செல்ல மைதானம் அருகில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us