வரதட்சணை கொடுமை தற்கொலை கணவர் உட்பட 4 பேருக்கு '7 ஆண்டு'
வரதட்சணை கொடுமை தற்கொலை கணவர் உட்பட 4 பேருக்கு '7 ஆண்டு'
வரதட்சணை கொடுமை தற்கொலை கணவர் உட்பட 4 பேருக்கு '7 ஆண்டு'
ADDED : ஜூலை 20, 2024 06:43 AM
மங்களூரு: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உட்பட நான்கு பேருக்கு, ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
ஷிவமொகா மாவட்டம், பத்ராவதி தாலுகா திப்லாபூரை சேர்ந்தவர் மஜீத் அகமது. இவரது முதல் மனைவி சபூரா அஞ்சும். கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியை பிரிந்த மஜீத் அகமது, சென்னகிரியின் ரேஷ்மா பானு, 30 என்பவரை 2018ல் இரண்டாவது திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின் மஜீத் அகமதுவும், ரேஷ்மா பானுவும் மங்களூரில் வசித்தனர்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் முதல் மனைவி சபூரா அஞ்சும், அவரது தாய் மும்தாஜ் பானு, சகோதரர் ஜமீர் அகமது ஆகியோரை, மஜீத் அகமது தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இரண்டு மனைவியருடன் ஒரே வீட்டில் வசித்தார். இந்நிலையில் முதல் மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி இரண்டாவது மனைவிக்கு மஜீத் அகமது தொல்லை கொடுத்தார்.
இதனால் மனமுடைந்த ரேஷ்மா பானு 2019ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மங்களூரு வடக்கு போலீசார், மஜீத் அகமது, சபூரா அஞ்சும், மும்தாஜ் பானு, ஜமீர் அகமது ஆகியோரை கைது செய்தனர்.
நான்கு பேர் மீதும் மங்களூரு 6வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி காந்தராஜ் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பில், நான்கு பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.