Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மதமாற்றம் செய்வது உரிமையாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

மதமாற்றம் செய்வது உரிமையாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

மதமாற்றம் செய்வது உரிமையாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

மதமாற்றம் செய்வது உரிமையாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

UPDATED : ஜூலை 12, 2024 04:43 AMADDED : ஜூலை 12, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
பிரயாக்ராஜ்: 'குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதற்கு உள்ள உரிமை அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட மதத்துக்கு மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோத மத மாற்ற தடுப்புச் சட்டம், 2-021ல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், மஹராஜ்கஞ்சைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், அதை நிராகரித்தார்.

வற்புறுத்தல்


உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மஹராஜ்கஞ்சில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த ஏழை எளிய மக்களை மத மாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கின்றன. இதுபோன்ற ஒரு மத மாற்ற நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லபட்ட ஒருவர், அங்கிருந்து தப்பி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அளித்த அந்த நபரின் வாக்குமூலத்தின்படி, குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்களை அழைத்து, நோய்களில் இருந்தும், வறுமையில் இருந்தும் விடுபட, கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும் பலரை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்துள்ளனர்.

உத்தர பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி, இவ்வாறு ஆசைகாட்டி, வற்புறுத்தி, மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்வது குற்றமாகும். போலீசாருக்கு தகவல் தெரிவித்தவர், தன்னை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ய முயற்சி நடந்ததாகக் கூறியுள்ளார். மேலும், பலரையும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க முடியாது.

நம் அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவின்படி, ஒருவர் தாம் விரும்பிய தொழில் செய்தல், மனதில் உருவாகும் கருத்தை சுதந்திரமாக தெரிவிப்பது, மத நம்பிக்கைகளை பின்பற்றுவது ஆகிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

உரிமை


அரசியலமைப்பு சட்டத்தின் இந்த பிரிவின்படி, ஒருவர் தான் விரும்பும் அல்லது பின்பற்றும் மதத்தை கடைப்பிடிக்கலாம்; அது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம். அதே நேரத்தில் மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமை அதில் வழங்கப்படவில்லை.

விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளதுபோல், மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை மதமாற்றம் செய்வதை உரிமையாக கருத முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்த நீதிபதி!

உத்தர பிரதேசத்தின் ஹாமிர்புர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட தன் சகோதரர் ராம்பாலை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதாக, ராம்காளி பிரஜாபதி என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் சமீபத்தில் அளித்த உத்தரவில், மதமாற்றம் தொடர்பான பிரச்னை குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார், 'மதப் பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர, ஒருவரை அவரது சொந்த மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல.
'எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுகின்றனர். 'இது போன்ற மதக் கூட்டங்கள் நடப்பதை உடனடியாக நிறுத்தவில்லை எனில், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் ஒருநாள் சிறுபான்மையினராக மாறிவிடுவர்' என, தெரிவித்திருந்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us