தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை அமித் ஷாவிடம் கவர்னர் விளக்கம்
தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை அமித் ஷாவிடம் கவர்னர் விளக்கம்
தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை அமித் ஷாவிடம் கவர்னர் விளக்கம்
UPDATED : ஜூலை 18, 2024 12:38 AM
ADDED : ஜூலை 18, 2024 12:06 AM

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக கவர்னர் ரவி நேற்று சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் மற்றும் சட்டம் - ஒழுங்கு சூழ்நிலைகளை எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி வந்த தமிழக கவர்னர் ரவி, நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி பிரதமர் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், தமிழக கவர்னர் ரவி நேற்று சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம், நலன் ஆகியவற்றில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்தது.
தமிழக மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகள் குறித்தும், அது பற்றிய ஆழ்ந்த அறிவு உடையவராகவும் உள்ள அமைச்சர் அமித் ஷா, அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையுடனும் உள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் தமிழக கவர்னர் ரவி நேற்று காலை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆலோசித்தேன்; திறன் மற்றும் கல்வி வாயிலாக தமிழக இளைஞர்களின் வாழ்வை செம்மைப்படுத்த அக்கறையுடன் உள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மிக்க நன்றி' என, குறிப்பிட்டுள்ளார்
-- நமது டில்லி நிருபர் -.