பர்த்டே பார்ட்டியில் கஞ்சா... பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு
பர்த்டே பார்ட்டியில் கஞ்சா... பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு
பர்த்டே பார்ட்டியில் கஞ்சா... பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 11, 2025 09:59 PM

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடத்திய பர்த்டே பார்ட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக பிரபல தெலுங்கி பாடகி மங்லி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தின் கன்னட மொழி பதிப்பில் 'ஊ சொல்றியா மாமா' படத்தின் பாடலை பாடியவர் தெலுங்கு பாடகி மங்லி. இவர் பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் நேற்று தனது பிறந்த நாளை ஹைதராபாத்தின் செவெல்லா பகுதியில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில், குடும்பத்தினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் தெலுங்கு முக்கிய பிரமுகர்கள் என 50க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிக்பாஸ் பிரபலம் திவி, பாடகி இந்திவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த பார்ட்டியில்போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு போதைப்பொருட்களும், வெளிநாட்டு மதுபானங்களும் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 9 பேர் கஞ்சா பயன்படுத்தியது உறுதியானது.
இதையடுத்து, அனுமதியில்லாமல் பார்ட்டி நடத்தியதாக பாடகி மங்லி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சுங்கத்துறையினரின் அனுமதியில்லாமல் வெளிநாட்டு மதுபானங்களை கொண்டு வந்து பயன்படுத்தியது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் பார்ட்டி நடத்த அனுமதித்த ரிசார்ட் மேலாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே திரையுலகில் போதை கலாசாரம் தலைதூக்கியிருப்பது வெட்ட வெளிச்சமாகி வரும் நிலையில், பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.