சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு? கேரள நடிகர்கள் வீடுகளில் சோதனை
சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு? கேரள நடிகர்கள் வீடுகளில் சோதனை
சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு? கேரள நடிகர்கள் வீடுகளில் சோதனை
ADDED : செப் 24, 2025 05:36 AM

திருவனந்தபுரம்: வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக, பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் வீடுகளில் நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு நேரடியாக இறக்குமதி செய்யும் கார்களுக்கும், காரின் விலையில், 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இது கார் இன்ஜின் திறனை பொறுத்து மாறும்.
இந்நிலையில், நம் அண்டை நாடான பூட்டானில் ராணுவ உயரதிகாரிகள் பயன்படுத்திய 'லேண்ட் க்ரூஸர்', 'லேண்ட் ரோவர்' போன்ற சொகுசு கார்கள் சில மாதங்களுக்கு முன் ஏலத்தில் வந்தன.
அதை ஒரு கும்பல் சில லட்சம் ரூபாய்க்கு வாங்கி இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி., என எதையும் செலுத்தாமல் அசாம், பீஹார் எல்லை வழியாக நம் நாட்டுக்குள் கடத்தி வந்துள்ளனர்.
வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில், 'நம் நாட்டுக்குள் எட்டு சொகுசு கார்களை பூட்டானில் இருந்து கடத்தி வந்து, ஹிமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்துள்ளனர்.
'அங்கு சாலை வரி குறைவு. பின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு விற்று, அவரவர் ஊரில் மறுபதிவு செய்துள்ளனர்.
'இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த நாங்கள், 'நும்கோர்' என்ற பெயரில் நாடு முழுதும் நேற்று சோதனையில் ஈடுபட்டோம்' என்றனர்.
குறிப்பாக கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகளிலும் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். துல்கர் சல்மான் வீட்டில் இருந்து சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இதேபோல் கார் விற்பனையகம் மற்றும் பல தொழிலதிபர்களின் இடங்களிலும் சோதனை நடந்தது. எத்தனை கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற தகவல் வெளியிடப்படவில்லை.