7 மாதங்களில் 25 திருமணங்கள்; வசமாக சிக்கிய 'கல்யாண ராணி'
7 மாதங்களில் 25 திருமணங்கள்; வசமாக சிக்கிய 'கல்யாண ராணி'
7 மாதங்களில் 25 திருமணங்கள்; வசமாக சிக்கிய 'கல்யாண ராணி'
ADDED : மே 21, 2025 12:21 AM

ஜெய்ப்பூர்,: அன்பான மனைவி, அடக்கமான மருமகளாக நடித்து, 7 மாதங்களில், 25 ஆண்களை ஏமாற்றி பணம், நகைகளுடன் ஓட்டம் பிடித்த, 'கல்யாண ராணி'யை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூரை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அனுராதா பஸ்வான், 32, என்பவருக்கும் கடந்த மாதம் 20ம் தேதி திருமணம் நடந்தது. கல்யாண தரகர் பப்பு மீனா என்பவர் வரன் பார்த்து கொடுத்தார்.
காணவில்லை
இதற்காக அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கமிஷனாக விஷ்ணு கொடுத்தார்.
திருமணம் முடிந்து விஷ்ணுவை மிகவும் பொறுப்பாக பார்த்துக் கொண்டார் அனுராதா. மனைவியின் கவனிப்பில் கிறுகிறுத்துப் போனார் விஷ்ணு.
அவரது வீட்டாருக்கும் பொறுப்புள்ள மருமகளாக நடந்து கொண்டார். ஊராரும், உறவினரும் பாராட்டிய வேளையில், அனுராதாவை திடீரென ஒரு நாள் காணவில்லை.
வீட்டில் இருந்த 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், 30,000 ரூபாய் ரொக்கம், 30,000 ரூபாய் மதிப்புடைய, 'மொபைல் போன்' என அனைத்தையும் அள்ளிக் கொண்டு அனுராதா, 'எஸ்கேப்' ஆகியிருந்தார்.
விஷ்ணு அளித்த புகாரின் அடிப்படையில், அனுராதா குறித்து ராஜஸ்தான் போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது தான், அவர் கல்யாணம் செய்து புது மாப்பிள்ளைகளை ஏமாற்றுவதை தொழிலாக செய்து வருவது தெரியவந்தது.
ஏமாற்றம்
மாநிலம் மாநிலமாக மாறி, வேறு வேறு பெயர்களில் 25 திருமணங்கள் செய்து, இந்த மோசடியை அவர் அரங்கேற்றி உள்ளார். வரன் பார்க்கும் படலத்தில் இருந்தே இந்த ஏமாற்று வேலை ஆரம்பமாகி விடுகிறது. ஏழு மாதங்களில், 25 பேரை ஏமாற்றியது தெரியவந்தது.
கல்யாண புரோக்கருமே அனுராதாவின் ஆள் தான். இதை தெரிந்து கொண்ட ராஜஸ்தான் போலீசார், போபாலில் இருந்த அனுராதாவுக்கு வலை விரித்தனர்.
போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வரனாக அனுப்பி, கல்யாண தரகர் வாயிலாக திருமண ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கு வந்த அனுராதாவை போலீசார் கைது செய்தனர்.