கடற்படையிடம் உதவி கேட்டுள்ளோம்: கேரள முதல்வர்
கடற்படையிடம் உதவி கேட்டுள்ளோம்: கேரள முதல்வர்
கடற்படையிடம் உதவி கேட்டுள்ளோம்: கேரள முதல்வர்
ADDED : ஜூலை 31, 2024 05:50 PM

திருவனந்தபுரம்: மீட்புகுழுவினர் செல்வதற்காக தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது; சவாலான இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லவும் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மீட்புகுழுவினர் செல்வதற்காக தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது; சவாலான இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லவும் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
வயநாட்டில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது கணிக்க முடியாது மற்றும் வேதனை நிறைந்த பேரிடர். 191 பேர் இன்னும் காணவில்லை. பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை விரைவில் மீட்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
பழங்குடியினரை வேறு இடத்திற்கு மாற்றி வருகிறோம். செல்ல விரும்பாதவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தற்போது 82 நிவாரண முகாம்களில் 2,017 தங்கி உள்ளனர். மேப்பாடியில் 8 முகாம்கள் அமைக்கப்பட்டு 1,486 பேர் தங்கி உள்ளனர். முண்டக்கல் பகுதியில் மீட்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அட்டமாலா மற்றும் சூரமலை பகுதியில் நிலைமை மேம்பட்டு உள்ளது. இன்று கூடுதலாக 132 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முதல் பிரேத பரிசோதனை நடக்கிறது. அவர்களுக்கு உதவ கோழிக்கோடு மற்றும் தலசேரி பகுதியில் இருந்து டாக்டர்கள் விரைந்துள்ளனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. மண்ணுக்குள் புதைந்துள்ள சடலங்களை மீட்க ஓய்வுபெற்ற துறை சார்ந்த நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.