UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM
ADDED : ஜூன் 23, 2011 10:55 AM
கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்காக, பல்கலை மானியக் குழு, ஆண்டுதோறும் இரு முறை நடத்தும், நெட் தேர்வை, முதுநிலைப் பட்டம் பெற்ற லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
தற்போது, மத்திய அரசு, சி.பி.எஸ்.சி., வாரியம் மூலம், நடப்பாண்டு முதல், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை தேர்வு செய்யவும், சி.டி.இ.டி., தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது.
முதுநிலைப் பட்டத்துடன், பி.எட்., முடித்தவர்கள், சி.டி.இ.டி., தேர்வுக்கு தகுதியுடையவர்கள் என்பதால், இவ்விரு போட்டித் தேர்வுகளையும் எழுத, தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தேர்வு வாரியங்கள் இரண்டும், போட்டித் தேர்வுகளை ஜூன் 26ம் தேதி நடத்துவதாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், இவ்விரு தேர்வுகளும் எழுத விண்ணப்பித்திருந்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், மத்திய அரசு அறிவிக்கும் போட்டித் தேர்வுகளை, வெளி மாநிலத்தவர்களே அதிக அளவு எழுதி வெற்றி பெறும் சூழலில், மத்திய அரசின் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை எழுத முடியாமல், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரண்டு தேர்வுகளையும் விண்ணப்பதாரர்கள் எழுதி, வெற்றி பெறும் வகையில், தமிழக அரசு பல்கலை மானியக் குழு தேர்வு தேதியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
