தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வயது குறைப்பு
தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வயது குறைப்பு
UPDATED : செப் 08, 2015 12:00 AM
ADDED : செப் 08, 2015 10:06 AM
ஊட்டி
: மத்திய அரசின், தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், ஜன., 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமூக நலன் மற்றும் தேச வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தனி நபர் சேவையில், ரத்த தானம், சமூக சேவை உட்பட சமுதாயம் சார்ந்த பணிகளில் சிறப்பாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும், 25 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பதக்கம் மற்றும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு வரை, இந்த விருதுகளை பெறும் தனி நபருக்கான வயது வரம்பு, 13 முதல் 35 வரை இருந்தது. நடப்பாண்டு, வயது வரம்பு, 15 முதல் 29 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுகையில், நடப்பாண்டு, தேசிய இளைஞர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 5ம் தேதி கடைசி நாள் என்ற அறிவிப்பு, அதற்கு இரண்டு நாள் முன்னர்தான் வெளியிடப்பட்டது. இதனால் தகுதியிருந்தும், பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றனர்.
