விடுமுறை நாளிலும் கட்டாய பணி; பள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி
விடுமுறை நாளிலும் கட்டாய பணி; பள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி
UPDATED : செப் 24, 2015 12:00 AM
ADDED : செப் 24, 2015 02:33 PM
தமிழக பள்ளி கல்வித் துறையில், 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த
அலுவலகங்களில், சில ஆண்டுகளாக,
ஓய்வு பெறுவோர், பணி மாறுதல் பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் மற்றும் ஏற்கனவே உள்ள
காலியிடங்களில் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தேக்கமடைந்த பணிகளைக் கவனிக்க, அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஊழியர்களை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால்
பல ஊழியர்கள், தங்கள் குடும்ப
உறுப்பினர்கள், குழந்தைகளிடம் கூட
ஒன்றாக இருக்க முடியாமல், மன அழுத்த
பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னையில், இன்று பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட
மாநாடு, எழும்பூர் மாநில
மகளிர் பள்ளியில் நடக்கிறது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பொதுச் செயலர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆவணம் சேகரித்தல், பள்ளி வாரியாக புள்ளிவிவரம் சேகரித்தல் உள்ளிட்ட பல பணிகள், ஊழியர்கள் மீது கூடுதலாக சுமத்தப்படுகின்றன. எனவே, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை கூடுதலாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுமுறை நாட்களில் ஊழியர்கள் அலுவலகம் வர நிர்ப்பந்திக்க கூடாது.அலுவலக பணியாளர்களின் குறைகளைத் தீர்க்க, மூன்று மாதங்களுக்கு, ஒருமுறை உயரதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற பெயரில் அலுவலக பணியாளர்களை விசாரணையின்றி, போதிய காரணங்களின்றி ஆணைகள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசு அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
