இயற்கை முறையில் கிருமிநாசினி; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
இயற்கை முறையில் கிருமிநாசினி; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
UPDATED : செப் 24, 2015 12:00 AM
ADDED : செப் 24, 2015 10:29 AM
ஆமதாபாத், டிசைன் பார் சேஞ்ச் அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, புராஜக்ட் எக்ஸ்போ போட்டி நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடித்துள்ள இயற்கை கிருமிநாசினி குறித்து மாணவர்கள் கூறியதாவது: அன்றாடம் பயன்படுத்தும், சோப், ஷாம்பூ உள்ளிட்ட கிருமிநாசினி அனைத்தும் ரசாயனங்களால் செய்யப்பட்டவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றை கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளோம். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவள்ளி ஆகியவற்றை கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்துள்ளோம். இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையை சேர்த்துள்ளோம்.
இயற்கை கிருமி நாசினியால் கையும் சுத்தமாகும்; உடலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது. இவை எங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயன்படுத்த, நாங்களே தயாரித்து கொடுத்துள்ளோம். இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளியின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி உதவினார். இவ்வாறு, மாணவர்கள் கூறினர்.
பாக்கெட் உணவுக்கு குட்பை:
ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ருதி, சந்தியா மற்றும் மவுலியா இணைந்து, பாக்கெட் உணவுகளை சாப்பிடுவ தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவி ஸ்ருதி கூறுகையில், பாக்கெட் உணவால், உடலுக்கு பல்வேறு கெடுதல்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பாக்கெட் உணவுக்கு செலவிடும் பணத்தில், புத்தகங்கள் வாங்கித்தர பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகிறோம், என்றார்.
