புகாரில் சிக்கும் நிர்வாகிகள்; தி.மு.க., தலைமை 'அப்செட்'
புகாரில் சிக்கும் நிர்வாகிகள்; தி.மு.க., தலைமை 'அப்செட்'
புகாரில் சிக்கும் நிர்வாகிகள்; தி.மு.க., தலைமை 'அப்செட்'

மதுரை: இடமோசடி, ஊழல் என அடுத்தடுத்து மதுரை நிர்வாகிகள் மீது குவியும் புகார்களால் தி.மு.க., தலைமை 'அப்செட்'டாகி உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அறிவிக்கப்படாத பிரசாரத்தை துவக்கி உள்ளன. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்ய அமைச்சர் மூர்த்திக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை தி.மு.க., நிர்வாகிகள் மீதான அடுத்தடுத்த புகார்களால் ஆளுங்கட்சி தலைமை அதிர்ச்சியில் உள்ளது. இவ்விவகாரம் மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் முடிவில் தலைமை உள்ளது.
இன்று மதுரைக்கு வரும் துணை முதல்வர் உதயநிதி, இவ்விவகாரம் குறித்து அமைச்சர்கள், மாவட்ட செயலர்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
மதுரையில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், கோவை மாவட்டத்தில் நடந்த இடமோசடி புகாரில் சிக்கியுள்ளார்.
பெண் கவுன்சிலர் ஒருவர் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்குவதில் ஊழல் செய்தது, விளையாட்டு அணி நிர்வாகி ஒருவர் இடச்சீட்டு என்ற பெயரில் மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தி.மு.க.,வினர் மீது வரிசைகட்டுகின்றன.
மாவட்ட நிர்வாகி ஒருவர் கோவில் விழாவிற்காக நடத்திய நன்கொடை வசூலில் முறைகேடு செய்து, பணியாளர் ஒருவரை ஜாதியை சொல்லி திட்டிய புகாரில் சிக்கியுள்ளார்.
இதுபோல் வட்டச் செயலர் ஒருவர், குஜராத்திலிருந்து கொண்டுவரப்பட்ட யூரியா மூட்டைகளை இறக்குவதில் ரவுடிகளை வைத்துக்கொண்டு அதிக கமிஷன் பெற்றதாக, பா.ஜ., அண்ணாமலை தகவல் வெளியிட்டுள்ளார்.
மாநகர தி.மு.க.,வை சேர்ந்த இவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீதான புகார்கள் தலைமைக்கு சென்றுள்ளன.
இதுதவிர, மாநகராட்சியில் நடந்த பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேட்டிலும் கட்சியினர், கவுன்சிலர்கள் ஈடுபட்டது குறித்து விசாரணை அறிக்கை தாக்கலாகியுள்ளது.
இப்படி மதுரை மாநகர தி.மு.க.,வினர் மீது குவியும் புகார்களால், கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. இவ்வாறு கூறினர்.