ADDED : அக் 18, 2025 10:34 PM
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே, பைக் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில், நர்ஸ் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவிதா, 22; ஒரகடம் பகுதியில் தங்கி, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று, கடலுார் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான சுபாஷ் என்பவருடன், 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சீர்காழி நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது, மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்செந்துார் நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து, இவர்களது பைக் மீது மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்த நிலையில், ஜீவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டிய சுபாஷ் காயங்களின்றி உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற படாளம் போலீசார், ஜீவிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


