Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/  மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள்  --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்

  மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள்  --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்

  மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள்  --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்

  மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள்  --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்

UPDATED : டிச 05, 2025 07:17 AMADDED : டிச 05, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
மழை வெள்ளத்தால், சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட சாலைகள் சின்னாபின்னமாகியுள்ளன. கரடு முரடாக, மரண பள்ளங்களாக மாறியுள்ளதால், வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். தற்காலிகமாக, 'பேட்ச் ஒர்க்' எனும் சாலை ஒட்டுப்பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையில், 387 கி.மீ., நீளத்திற்கு 471 பேருந்து வழித்தட சாலைகள்; 5,270.33 கி.மீ., நீளத்திற்கு, 34,640 உட்புற சாலைகள்; 16 சுரங்கப்பாதை, மேம்பாலங்களை, சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது.



அதேபோல், அண்ணா சாலை, 100 அடி சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகளை, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது.

'டிட்வா' புயல் இந்நிலையில், 'டிட்வா' புயலால் சென்னையில் நான்கு நாட்களாக பெய்த மழையால், நெடுஞ்சாலைகள், பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியதால், மாநகராட்சி முழுதும் பல சாலைகள் கண்டமாகியுள்ளன. பெரிய பள்ளங்கள் விழுந்தும், குண்டும் குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் சாலை சேதமடைந்துள்ளன.

இதனால் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக பெண்கள், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தினசரி, 30க்கும் மேற்பட்டோர் கரடு, முரடான சாலைகளால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

அதேபோல், நான்கு சக்கர வாகனங்களும், மேடு பள்ளங்களில் இயக்கப்படுவதால், அவற்றின் பாகங்கள் சேதமடைகின்றன.

இதனால், சாலைகள் மற்றும் மேம்பாலங்களிலும் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

'பேட்ச் ஒர்க்' இதற்கு முன், மழை பெய்தாலும் அவசரம் கருதி, வண்டல் மண், ஜல்லிக்கற்கள் மற்றும் சிமென்ட் கலவை கொண்டு தற்காலிக அடிப்படையில், சாலைகளை மாநகராட்சி சீரமைத்து வந்தது. தற்போது, மண்டலத்திற்கு போதிய அளவு சீரமைப்புக்கான நிதி தராததால், முறையாக பராமரிக்க முடியவில்லை.

அதேநேரம், பல இடங்களில் தற்போது தான் புதிதாக சாலை அமைக்க, பழைய சாலை பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. மழையால் அச்சாலையும் போடப்படாததால், வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி சாலைகள், அந்தந்த மண்டலம் வாரியாக சீரமைக்கப்படும். மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடங்களில், மெட்ரோ நிர்வாகம் தான் சீரமைக்க வேண்டும். அனைத்து துறைகளுடனும் இணைந்து, சாலையை சீரமைக்க அறிவுறுத்தி உள்ளோம்.

சென்னையில், 5,000க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. தற்போது மழை பெய்து வரும் நிலையில், மழை நின்றபின், உடனடியாக 'பேட்ச் ஒர்க்' எனும் சாலை ஒட்டுப்பணி நடக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சரக்கு வாகனங்கள் படையெடுப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த நான்கு நாட்களாக மழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சென்னைக்குள் சரக்கு வாகனங்கள் வர முடியவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்கள், காலியாக உள்ள இடங்களில் சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. கனமழை எச்சரிக்கை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனங்கள் சென்னைக்கு புறப்படவில்லை. மூன்று நாட்களுக்கு பின், மழை ஓய்ந்து, சென்னையில் வெயில் காட்ட துவங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும், சரக்கு வாகனங்கள் அதிகளவில் சென்னைக்கு வந்து செல்ல துவங்கியுள்ளன. 'பார்சல்' பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு ஆம்னி பேருந்துகளும், நேற்று முதல் இயல்பு நிலைக்கு வந்துள்ளன. இதனால், மாதவரம் நெடுஞ்சாலை, ஜி.என்.டி., சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சென்னைக்கு அவசர பணிக்காக புறப்பட்டோரும், சென்னையில் இருந்து வெளியே செல்ல புறப்பட்டோரும், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். தி.நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, சவுக்கார்பேட்டையில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு தடைபட்ட லாரிகள் வரத்தும் துவங்கியுள்ளது.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us