Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதிய பஸ்கள் இயக்காததால் அதிருப்தி கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராட்டம்

போதிய பஸ்கள் இயக்காததால் அதிருப்தி கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராட்டம்

போதிய பஸ்கள் இயக்காததால் அதிருப்தி கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராட்டம்

போதிய பஸ்கள் இயக்காததால் அதிருப்தி கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராட்டம்

UPDATED : ஜூன் 06, 2025 08:15 AMADDED : ஜூன் 06, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்காததால், நேற்று முன்தினம் இரவு, பயணியர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் அதிகாலை வரை நீடித்ததால், ஜி.எஸ்.டி., சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மேல் புறநகர் ரயில், பேருந்து, ஆட்டோ, இரு சக்கர வாகனம், கால் டாக்கி வாயிலாக, 6,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்தனர்.

இவர்கள் வெளி ஊர்களுக்குச் செல்ல போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், இரவு 11:00 மணியளவில், வெளியூர் சென்ற பேருந்துகளை சிறை பிடித்தனர்.

மேலும், நள்ளிரவு 12:00 மணியளவில், 300க்கும் மேற்பட்ட பயணியர், ஜி.எஸ்.டி., சாலையில் அமர்ந்து போராடத் துவங்கினர். இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட, 20 காவல் நிலைய போலீசார், சிறப்பு காவல் படையை சேர்ந்த 40 போலீசார் கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். பின், பயணியருடன், போலீஸ் உயரதிகாரிகள் பேச்சு நடத்தி, அதிக பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, நேற்று அதிகாலை 2:00 மணிக்குமேல் நிலைமை சீரானது.

இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:

வரும் 6ம் தேதி முகூர்த்த நாள், 7ம் தேதி பக்ரீத் பண்டிகை, 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக பயணியர் வந்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து துாத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இல்லாததால் விழுப்புரம், திருச்சி செல்லும் பேருந்துகளில் பயணித்து, அங்கிருந்து மாறிச் செல்ல, 2,000க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை செல்ல, 6,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்தனர். ஆனால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் சென்றதால், கூட்டம் முண்டியடித்தது. கூடுதல் பேருந்து இயக்கும்படி கேட்டபோது, போக்குவரத்து துறை அதிகாரிகள் மழுப்பலான பதில் கூறினர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்களை

வதைப்பதுதான்

நல்லாட்சியா?

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால், சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல, மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், மக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டங்களாலும், பற்றாக்குறைகளாலும் மக்களை வாட்டி வதைப்பதன் பெயர்தான், நாடு போற்றும் நல்லாட்சியா?

பஸ் நிலையத்திற்கு தன் தந்தை பெயரை சூட்டுவதில் அவசரத்துடனும் செயலாற்றிய முதல்வர் ஸ்டாலின், பஸ் நிலையம் பயன்படும் வகையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய தவறிவிட்டார்.

பஸ் நிலையம் கண்காட்சிக்காக கட்டப்பட்டதாக என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது.

பொது மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதை விட்டு விட்டு, மக்கள் நலனில் கவனம் செலுத்தி, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு, அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

- நயினார் நாகேந்திரன்,

தமிழக பா.ஜ., தலைவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us