/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மது குடித்த இருவருக்கு வாந்தி, பேதி பொள்ளாச்சி அருகே பரபரப்பு மது குடித்த இருவருக்கு வாந்தி, பேதி பொள்ளாச்சி அருகே பரபரப்பு
மது குடித்த இருவருக்கு வாந்தி, பேதி பொள்ளாச்சி அருகே பரபரப்பு
மது குடித்த இருவருக்கு வாந்தி, பேதி பொள்ளாச்சி அருகே பரபரப்பு
மது குடித்த இருவருக்கு வாந்தி, பேதி பொள்ளாச்சி அருகே பரபரப்பு
ADDED : ஜூன் 30, 2024 02:08 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, மது குடித்த இருவருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து, அக்கிராமத்தில் போலீசார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மஞ்சநாயக்கனுாரை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி மகேந்திரன், 40. அதே பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் பா.ஜ., ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், 55. நேற்றுமுன்தினம், மகேந்திரன், ரவிச்சந்திரன் இருவருக்கும் திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும், மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிராமத்தில் பரபரப்பு
சாராயம் குடித்ததால், இருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராம மக்களிடம், விசாரணை மேற்கொண்டனர். 'மப்டி'யில் வந்த போலீசார், வீடு வீடாக சென்றும், பொது இடங்களிலும் விசாரணை செய்தனர்.
தீவிர விசாரணை
போலீஸ் விசாரணையில், கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மது குடித்ததில் உடல்நலை பிரச்னை ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
எங்கிருந்து 'சரக்கு' வாங்கி வந்தனர் என போலீசார் விசாரித்த போது, 'திருமூர்த்தி அருகே, மாவடப்பு வனப்பகுதியில் ஒருவரிடம், சாராயத்தை வாங்கி வந்து கடந்த, 27ம் தேதி மஞ்சநாயக்கனுாரை சேர்ந்த சிலர் ராஜா,49, செந்தில்குமார்,48, ராமகிருஷ்ணன்,40, செந்தில்குமார், 30, மகேந்திரன், 40 ஆகியோர் குடித்தனர்.
நேற்றுமுன்தினம், மகேந்திரன், ரவிச்சந்திரன் இருவரும், டாஸ்மாக் மதுவுடன், மாவடப்பில் இருந்து வாங்கி வந்த சாராயத்தை கலந்து குடித்ததாகவும், அதில் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து, வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் மாவடப்புக்கு சென்று விசாரித்தனர்.
மாசடைந்த நீர் காரணமா?
போலீசார் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் எழுத்து வாயிலாக தெரிவித்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அங்கலகுறிச்சி மதுக்கடையில் இருந்து முத்துக்குமார் என்பவர் மதுபானம் வாங்கி வந்துள்ளார். அதை, ரவிச்சந்திரன் டீக்கடை அருகே உள்ள வீடு வளாகத்தில் அமர்ந்து, திறந்தவெளியில் இருந்த நீருடன் கலந்து, மகேந்திரனுடன் சேர்ந்து குடித்ததாகவும், அதனால், ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் கூறிய இடத்தில் இருந்த மாசடைந்த நீரில் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. அந்த நீரும், பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.