Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வடுகபாளையம் ரயில்வே கேட் திறக்க வேண்டும்! சப்-கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை

வடுகபாளையம் ரயில்வே கேட் திறக்க வேண்டும்! சப்-கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை

வடுகபாளையம் ரயில்வே கேட் திறக்க வேண்டும்! சப்-கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை

வடுகபாளையம் ரயில்வே கேட் திறக்க வேண்டும்! சப்-கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை

ADDED : செப் 23, 2025 08:40 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என குடியிருப்போர் நல சங்கத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி நகராட்சி வடுகபாளையம் செல்வ குமார் விஸ்தரிப்பு வீதியில், ரயில்வே கேட் செயல்படுகிறது. வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கோவையில் இருந்து வடுகபாளையம் செல்வோரும், சி.டி.சி., மேடு வழியாக ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.

கடந்தாண்டு ஜூலை மாதம் வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தால், ரயில்வே கேட் மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

கடந்த, 13ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரயில்வே கேட் மூடப்பட்டது. இது குறித்து கவுன்சிலர் உமா மகேஸ்வரி, 'பராமரிப்பு பணி என மூடப்பட்ட ரயில்வே கேட்டை உடனடியாக திறக்க வழிவகை செய்ய வேண்டும்,' என, மனு கொடுத்து வலியுறுத்தினர்.

இந்நிலையில், வலிமை குடியிருப்போர் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

வடுகபாளையம் ரயில்வே கேட் கடந்த, 10 மாதங்களுக்கு முன்பு மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. போராட்டத்துக்கு பின், ரயில்வே கேட் திறக்கப்பட்டது. அப்போது, ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பான வழி ஏற்படுத்தி கொடுத்து மூடுவதாக உறுதியளித்தனர்.

ரயில்வே கேட் வழியாக பள்ளி மாணவர்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகிறது. மாற்று வழித்தடம் இல்லாத நிலையில் இதுவே முக்கிய வழித்தடமாக உள்ளது. அதனால், ரயில்வே கேட் பராமரிப்பு பணி முடித்து திறக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, தாசில்தார் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.

'பணிகள் நடக்கும் போது ரயில்வே கேட் மூடிக்கொள்ளலாம். தற்போது பணிகள் முடிந்ததால் உடனடியாக கேட்டை திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும், என, ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டதாக வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us