ADDED : ஜூலை 27, 2024 06:20 AM
மதுரை : மதுரையில் இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது.
இந்தாண்டு ஜனவரி துவக்கத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம் அதிகரித்து பிப்ரவரி வரை உச்சத்தில் இருந்தது. வெயிலின் தாக்கத்தால் வைரஸ் தீவிரம் குறைய ஆரம்பித்தது. மே யில் யாரும் பாதிக்கப்படவில்லை. ஜூனில் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தனர்.
ஜூலை முதல்வாரம் சென்னையில் இருந்து வந்த ஒருவரும், உசிலம்பட்டியைச் சேர்ந்தவரும் குணமடைந்தனர். கடந்த வாரம் ஒருவர் தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுரு கூறியதாவது: மதுரையில் டெங்கு வைரஸ் தாக்கம் இல்லை. அதேபோல நிபா வைரஸ், சண்டிபுரா வைரஸ், கொரோனா தொற்றின் தாக்கமும் இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சலால் தினமும் 10 முதல் 15 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் போது டெங்கு வைரஸ் தாக்கம் பரவ வாய்ப்புள்ளது என்றார்.