Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கும் வரி கட்ட நோட்டீஸ் அனுப்பிய சிவகங்கை நகராட்சி

பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கும் வரி கட்ட நோட்டீஸ் அனுப்பிய சிவகங்கை நகராட்சி

பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கும் வரி கட்ட நோட்டீஸ் அனுப்பிய சிவகங்கை நகராட்சி

பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கும் வரி கட்ட நோட்டீஸ் அனுப்பிய சிவகங்கை நகராட்சி

ADDED : ஜூன் 02, 2024 03:44 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்களுக்கும் பணம் கட்ட வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சிவகங்கை நகராட்சியில் 2007-ல் பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. குழாய் பதித்தல், சுத்தி கரிப்பு நிலையம் அமைத்தல்,வீடுகளுக்கு இணைப்பு என 3 கட்டங்களாக பணிகள் நடந்தன.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முத்துப்பட்டியில் தினமும் 49.2 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடை வழியாக வரும் கழிவு நீரை பம்பிங் செய்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப மருதுபாண்டியர் நகர், மானாமதுரை ரோடு ஆகிய இடங்களில் நீரேற்று நிலையமும் அமைக்கப்பட்டன.

தற்போது பணிகள் முடிக்கப்பட்டு வீடுகளில் பாதாள சாக்கடை குழாய் இணைக்கப்பட்டுள்ளது.சிவகங்கையில் 18 ஆயிரத்து 67 வீடுகள் உள்ளது. இதில் 7 ஆயிரத்து 299 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை இணைப்பு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தி இணைப்பு பெறும் திட்டமும் நகராட்சியில் உள்ளது. எனினும் இது கட்டாயமாக்கப்படாததால் பெரும்பாலானவர்கள் இணைப்பு பெறாமல் வீட்டு கழிவுகளை சாக்கடையில் விடுகின்றனர்.

தற்போது 2024-25ம் ஆண்டிற்கு வரி செலுத்த வலியுறுத்தி அனைத்து வீடுகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆண்டிற்கு இரண்டு தவணையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி, குப்பை வரி குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு பாதாள சாக்கடை இணைப்பு பெறாத வீட்டின் உரிமையாளர்களுக்கும் பாதாள சாக்கடை இணைப்பிற்கான கட்டணம் கட்ட வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. இல்லாத இணைப்பிற்கு எப்படி வரி கட்டுவது என்ற கேள்வி எழுந்துள்ளதால் சொத்து வரியை கூட கட்ட முடியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அதிகாரிகளின் தேவையற்ற நடவடிக்கையால் நகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாய் தாமதம் ஏற்படுவதோடு மக்கள் தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், அவ்வாறு உள்ள இணைப்புகளை தற்போது நீக்கி வருகிறோம். தேர்தல் முடிவிற்கு பிறகு முற்றிலும் நீக்கிவிடுவோம். அவர்கள் பணம் கட்ட தேவையில்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us