ADDED : ஜூலை 16, 2024 11:58 PM

தேவகோட்டை : தேவகோட்டை அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோடிக்கோட்டையில் சுங்கச்சாவடி உள்ளது.
பெண் ஊழியர்கள் உட்பட 20 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஊதியம் மாதந்தோறும் சரியாக வழங்கப்படுவதில்லை. இம்மாதத்திற்கான ஊதியம் நேற்று காலை வரை வழங்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை சுங்கச்சாவடி பணியாளர்கள் டோல்கேட்டில் வாகனங்கள் செல்ல எந்த இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் எல்லா கேட்டையும் பாதையையும் திறந்து வைத்து விட்டு பணிகளை புறக்கணித்து ஓரமாக அமர்ந்து விட்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பாஸ்டேக் ஒட்டிய வாகனங்கள் மட்டும் ஸ்கேனிங் செய்து சென்றது. பல வாகனங்கள் ஸ்கேனிங் செய்யாமல் வேகமாகவும், பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் இலவசமாக கடந்து சென்றன.
தகவல் அறிந்த பகுதி துணை மேலாளர் உட்பட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். சமரச பேச்சை தொடர்ந்து இன்று (நேற்று) மதியமே சம்பளம் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.