/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ நாட்டு வெடி தயாரிப்பில் பயங்கர விபத்து; கட்டடம் இடிந்து இருவர் பலி: பெண் கைது நாட்டு வெடி தயாரிப்பில் பயங்கர விபத்து; கட்டடம் இடிந்து இருவர் பலி: பெண் கைது
நாட்டு வெடி தயாரிப்பில் பயங்கர விபத்து; கட்டடம் இடிந்து இருவர் பலி: பெண் கைது
நாட்டு வெடி தயாரிப்பில் பயங்கர விபத்து; கட்டடம் இடிந்து இருவர் பலி: பெண் கைது
நாட்டு வெடி தயாரிப்பில் பயங்கர விபத்து; கட்டடம் இடிந்து இருவர் பலி: பெண் கைது
ADDED : மே 18, 2025 11:11 PM

தஞ்சாவூர்,: தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்த அப்பாஸ் என்பவர் வெளிநாட்டில் உள்ளார். இவரின் சகோதரி சமரத் பீவி, 47, அவரது மகன் முகமது ரியாஸ், 19. இருவரும் நெய்வேலி தென்பாதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில், பட்டாசு கடை நடத்தி வந்தனர்.
அந்த இடத்தில், நாட்டு வெடியை சட்ட விரோதமாக தயாரித்து கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை வழக்கம் போல, முகமது ரியாஸ், நெய்வேலியை சேர்ந்த சுந்தரராஜன், 60, உள்ளிட்ட ஐந்து பேர் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இருவர் வெளியே சென்றனர்; சிவசாமி என்பவர் வெளியே நின்று வேலை செய்தார்.
அப்போது, திடீரென பட்டாசுகள் வெடிக்க துவங்கின. சிவசாமி என்பவர் வெடி சத்தம் கேட்டு ஓடிவிட்டார். பட்டாசு கடையில் சிக்கிக்கொண்ட முகமது ரியாஸ் மற்றும் சுந்தரராஜன் மீது கட்டடம் இடிந்து விழுந்தது.
ஏற்கனவே, தீக்காயம் அடைந்த நிலையில், கட்டடமும் இடிந்து அவர்கள் மீது விழுந்ததால், வலியால் கதறினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி, இருவரையும் இறந்த நிலையில் மீட்டனர்.
இருவரின் உடல்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முறைகேடாக அங்கு நாட்டு வெடி தயாரிக்கப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, சமரத் பீவியை கைது செய்தனர்; நாட்டு வெடி தயாரிக்க இடத்தை வாடகைக்கு கொடுத்த இடத்தின் உரிமையாளர் அண்ணாதுரையை போலீசார் தேடி வருகின்றனர்.