/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊத்துக்கோட்டை அறிவுசார் நகரம் அதிகாரிகள் ஜெர்மனி பயணம் ஊத்துக்கோட்டை அறிவுசார் நகரம் அதிகாரிகள் ஜெர்மனி பயணம்
ஊத்துக்கோட்டை அறிவுசார் நகரம் அதிகாரிகள் ஜெர்மனி பயணம்
ஊத்துக்கோட்டை அறிவுசார் நகரம் அதிகாரிகள் ஜெர்மனி பயணம்
ஊத்துக்கோட்டை அறிவுசார் நகரம் அதிகாரிகள் ஜெர்மனி பயணம்
ADDED : ஜூலை 30, 2024 06:37 AM
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனம், உலகத்தரத்தில் அறிவுசார் நகரம் அமைக்க உள்ளது. இதற்கான தொழில்நுட்ப விபரங்களை அறிந்து, தமிழகத்தில் செயல்படுத்த டிட்கோ உயரதிகாரிகள், ஜெர்மனி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜெர்மனி, பிரிட்டன் உட்பட பல நாடுகளில், உலகத்தரத்தில் பல்கலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய அறிவுசார் நகரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறப்பாக உள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில், 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், 1,703 ஏக்கரில் தமிழக அறிவுசார் நகரம் அமைக்க உள்ளது.
அங்கு கல்வியை மையமாக கொண்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலை, உயர்திறன் மையங்களை உள்ளடக்கிய கல்வி நிறுவனங்கள் அமைக்கலாம். வளர்ந்து வரும் துறைகளில் ஆய்வில் ஈடுபடும் நிறுவனங்களும் தொழில் துவங்கலாம்.
இதற்காக, 200 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை டிட்கோ ஏற்படுத்த உள்ளது.
இதன் வாயிலாக, தமிழகத்தில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கும், பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கும் அறிவு பகிர்வு ஏற்படும். இது, தனித்துவ கல்வியை மையமாக கொண்ட பசுமை நகரமாக இருக்கும்.
தற்போது, அறிவுசார் நகரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. அறிவுசார் நகரில் இடம்பெற வேண்டிய தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள, 'டிட்கோ' நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்ட அதிகாரிகள், ஜெர்மனிக்கு சென்றுள்ளனர்.