Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஒரே இடத்தில் இயங்கும் 2 பத்திரப்பதிவு அலுவலகங்களில்...வசதியில்லை: ரூ.100 கோடி வருவாய் கிடைத்தும் பதிவுதாரர் பரிதவிப்பு

ஒரே இடத்தில் இயங்கும் 2 பத்திரப்பதிவு அலுவலகங்களில்...வசதியில்லை: ரூ.100 கோடி வருவாய் கிடைத்தும் பதிவுதாரர் பரிதவிப்பு

ஒரே இடத்தில் இயங்கும் 2 பத்திரப்பதிவு அலுவலகங்களில்...வசதியில்லை: ரூ.100 கோடி வருவாய் கிடைத்தும் பதிவுதாரர் பரிதவிப்பு

ஒரே இடத்தில் இயங்கும் 2 பத்திரப்பதிவு அலுவலகங்களில்...வசதியில்லை: ரூ.100 கோடி வருவாய் கிடைத்தும் பதிவுதாரர் பரிதவிப்பு

ADDED : செப் 23, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும், ஒரே இடத்தில் தனித்தனியாக இயங்கி வருகிறது. நெரிசல் காரணமாக எல்லை பிரிக்கப்பட்டும், தனி அலுவலகத்திற்கு மாற்றாததால், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைத்தும், பதிவுதாரர்கள் நெரிசல் மற்றும் அடிப்படை வசதி கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்கள், 14 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

இங்கு, திருவள்ளூர், பாண்டூர், காக்களூர், வேப்பம்பட்டு, பாக்கம், வெள்ளியூர், செவ்வாப்பேட்டை உட்பட, 76 கிராமங்களைச் சேர்ந்தோர், நிலம் விற்பனை உள்ளிட்ட பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.

தினமும், சராசரியாக 250 பத்திரப்பதிவு நடந்து வருகிறது. முகூர்த்த நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். கடந்தாண்டு, 104.39 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு வாயிலாக வருவாய் கிடைத்ததால், மாவட்டத்தில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

அரசுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கும் இடமாக திகழ்ந்தாலும், குறுகிய இடத்தில் இயங்கி வருவதால், பத்திரப்பதிவிற்கு வருவோருக்கு எவ்வித அடிப்படை வசதியும் கிடைப்பதில்லை. நிற்க கூட இடமில்லாமல், குறுகிய கட்டடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு வருவோர் அமர இருக்கை, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை, குடிநீர் போன்ற எவ்வித வசதியும் இல்லை.

மேலும், தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார், கிளை சிறை, வட்ட வழங்கல் அலுவலகம், அரசு ஊழியர் சங்க அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதனால், இருசக்கர வாகனங்களை கூட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிறுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதை தொடர்ந்து, பத்திரப்பதிவு துறை, திருவள்ளூர், ஈக்காடு, பாண்டூர் உள்ளிட்ட 40 கிராமங்களை ஒரு பிரிவாகவும், பெருமாள்பட்டு, பாக்கம், வெள்ளியூர் உட்பட 36 கிராமங்களை மற்றொரு பிரிவாகவும் பிரித்து, தனித்தனி பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்கப்படும் என, உத்தரவிட்டது.

பெருமாள்பட்டு வருவாய் பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வந்த நிலையில், அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இரண்டாக பிரித்து, இரண்டு யூனிட்களும் செயல்பட்டு வருகிறது.

இதனால், பத்திரப்பதிவு அலுவலகம் பிரித்ததற்கான நோக்கமே நிறைவடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேப்பம்பட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சீனிவாசன் கூறியதாவது:

திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ள பகுதி குறுகியதாக உள்ளது என்பதற்காகவே தனி பிரிவு துவக்கப்பட்டது. ஆனால், அதையும் ஏற்கனவே இயங்கிய அலுவலகத்தின் ஒரு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

இரண்டாவது பிரிவு அலுவலகத்தை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, பெருமாள்பட்டு வருவாய்க்குள் அடங்கிய பகுதியில் அமைத்தால் தான், சுற்றியுள்ள 36 கிராமங்களுக்கும் ஏற்றதாக அமையும்.

மேலும், பெருமாள்பட்டு, 25 வேப்பம்பட்டு, 26 வேப்பம்பட்டு மற்றும் நத்தமேடு ஆகிய நான்கு கிராமங்களை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் புதிய வீட்டு மனை பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது.

எனவே, பெருமாள்பட்டு பகுதி அல்லது காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், ஏற்கனவே கலெக்டர் அலுவலகம் இயங்கி வந்த இடத்தில், புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும்.

இதுகுறித்து கலெக்டர், தமிழக முதல்வர் மற்றும் பத்திரப்பதிவு துறை செயலருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இடமாற்றமே நிரந்தர தீர்வு

திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. புதிய அலுவலகம் திறக்க அவகாசம் இல்லாததால், தற்காலிகமாக பழைய அலுவலகத்திலேயே இரண்டாவது பிரிவும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், அடிப்படை வசதி ஏற்படுத்தவும், தற்போது இயங்கி வரும் அலுவலகத்தை, விசாலமான இடத்திற்கு இடமாற்றம் செய்வதே நிரந்தர தீர்வாக அமையும்.
திருவள்ளூர் நகரில், அரசுக்கு சொந்தமான பல்வேறு கட்டடங்கள் காலியாக உள்ளன. வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், ஏற்கனவே செயல்பட்டு வந்த கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற அலுவலகம் காலியாக உள்ளன. அந்த கட்டடத்தில் புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை அமைக்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us