Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி., பாசன சபையினருக்கு பயிற்சி பரிந்துரைத்தது நீர்வளத்துறை

பி.ஏ.பி., பாசன சபையினருக்கு பயிற்சி பரிந்துரைத்தது நீர்வளத்துறை

பி.ஏ.பி., பாசன சபையினருக்கு பயிற்சி பரிந்துரைத்தது நீர்வளத்துறை

பி.ஏ.பி., பாசன சபையினருக்கு பயிற்சி பரிந்துரைத்தது நீர்வளத்துறை

ADDED : ஜூலை 14, 2024 12:50 AM


Google News
திருப்பூர்;'பி.ஏ.பி., பாசன சபை தலைவர்களுக்கு, தொழில்நுட்ப பயிற்சி வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்' என, திருச்சியில் உள்ள நீர்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்துக்கு, பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்; இது பாசன சபையினர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

பி.ஏ.பி., பாசன திட்டத்தில், திருமூர்த்தி அணை சார்ந்த பாசன பகுதிகளில், 134 பாசன சபை தலைவர்கள் உள்ளனர்; 800க்கும் மேற்பட்ட ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில், வீரணம்பாளையம் கிராமம் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில், உலக வங்கி மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கையில், 'பி.ஏ.பி., பாசன சபை தலைவர்களுக்கு, நீர் மேலாண்மை தொடர்பான பயிற்சி வழங்க வேண்டும்' என வலியுறுத்தியிருந்தனர்.

'போதிய நீரை பெற முடியாததால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், சுட்டிக்காட்டியிருந்தனர். அதோடு, நீர் பயனாளிகள் சங்கங்களுக்கு, சர்வதேச நிதியுதவி நிறுவனம் வழங்கும் முக்கியத்துவம் குறித்த விவரங்களையும் கேட்டிருந்தனர்.

அதன் விளைவாக, திருச்சி துவாக்குடியில் உள்ள நீர்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில், நீர் பாசன தலைவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்து தரும்படி, அந்நிறுவன முதன்மை பொறியாளருக்கு, பி.ஏ.பி., நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, வீரணம்பாளையம் நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:

பி.ஏ.பி., பாசன சபை தேர்தல், கடந்த, 2022ல் நடத்தப்பட்டது. தமிழ்நாடு நீர் மேலாண்மை சட்டத்தின் படி, பாசன சபை நிர்வாகிகளுக்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஆனால், பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. உலக வங்கி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இது, எங்களது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

கால்வாயில் வரும் நீரை அளவிடுவது, அதை சரிசமமான முறையில் பங்கிடுவது, வினியோகத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் களப்பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பயிற்சி வழங்குவர்.

நீர்வளத்துறையினரின் பரிந்துரை அடிப்படையில் விரைவில் பயிற்சி வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us