ADDED : செப் 18, 2025 04:00 AM

கண்டாச்சிபுரம்: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர், குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்றிருந்த நேரத்தில், கடந்த ஆக., 27 ம் தேதி, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது, வெள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருணாசலம், 47; என்பவர், சென்னை ஆவடியை சேர்ந்த கூடை பின்னும் தொழிலாளி விஜயகுமார்,44; என்பவருடன் சேர்ந்து, துரைசாமி வீட்டில் திருடியது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள், அப்பகுதியில் உள்ள ஏரியில் புதைத்து வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.