Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தாமதம்

பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தாமதம்

பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தாமதம்

பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தாமதம்

ADDED : ஜூலை 01, 2024 04:15 AM


Google News
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் சாக்கடை நீர் , மழை நீர் ரோட்டில் ஓடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நிலையில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தும் இதுவரையிலும் முதற்கட்ட பணியான கணக்கெடுப்பு மட்டுமே நடந்து வருகிறது. பாதாள சாக்கடை அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி நகராட்சி, நுாற்றாண்டு கண்ட நிலையில் 2021ல் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மாநகராட்சியான பின் பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அரசும், அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.

சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதோடு, ஆக்கிரமிப்பினாலும் தெருக்கள், ரோடுகள் சுருங்கிவிட்டன. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் பல்வேறு ஓடைகள் இருந்தாலும் பெரும்பாலானவை துார்வாரப்படவில்லை.

அனைத்து தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டிருந்தாலும், குடியிருப்புகள் தொழிற்சாலைகளின் கழிவுகளை தாங்கும் அளவிற்கு இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை நீரோடு மழை நீரும் தெருவிலும், ரோட்டிலும் ஓடுகின்றது.

இதற்காக சிவகாசியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அடுத்தடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் ஓட்டு வாங்குவதற்காக பாதாள சாக்கடை அமைக்கப்படும் என கூறியே வெற்றி பெற்று வந்தனர். ஆனால் இதற்காக எந்தப் பணியும் துவங்காத நிலையில் சமீபத்தில் மீண்டும் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிவகாசி மாநகராட்சியில் அளவீடு பணி செய்யும் துவங்கப்பட்டது. சிவகாசி, திருத்தங்கல் இரண்டும் சேர்த்து 179 கி.மீ., ல் பாதாள சாக்கடை அமைக்க கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சிவகாசி மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட ஆனையூர், விஸ்வநத்தம் , நாரணாபுரம், அனுப்பன்குளம், செங்கமல நாச்சியார்புரம், பள்ளப்பட்டி, உள்ளிட்ட 9 ஊராட்சிகள் தற்போது நிர்வாகத்தில் இல்லை. இந்த ஊராட்சிகளும் சிவகாசி மாநகராட்சியோடு இணைக்கப்படும் போது பாதாள சாக்கடை திட்டத்தின் படி 360 கி.மீ., அமைக்கப்பட வேண்டியிருக்கும்.

சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், உடனடியாக பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அரசு கூறியுள்ள நிலையில் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us