Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசியில் கவுன்சிலர்கள் அமளி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

சிவகாசியில் கவுன்சிலர்கள் அமளி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

சிவகாசியில் கவுன்சிலர்கள் அமளி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

சிவகாசியில் கவுன்சிலர்கள் அமளி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ADDED : அக் 14, 2025 03:37 AM


Google News
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் 3 மாதங்களுக்கு பின் நடந்த கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அமளி காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 173 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு பாக்யலட்சுமி, தி.மு.க.,: பூங்கா ஆக்கிரமிப்பு பிரச்னையில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞரை நீக்க வேண்டும் என 30 கவுன்சிலர்கள் கையெழுத்து இட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை இல்லை. 3 ஆண்டுகளாக பூங்கா பிரச்னை உள்ளது. ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக இருப்பது போன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கமிஷனர்: விசாரணையில் நீதிமன்ற நடவடிக்கை குறித்து மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்த விளக்கத்தில் அவரை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அந்த தீர்மானத்தில் உள்ள பிழை சரி செய்யப்படும்.

மேயர்: அந்த தீர்மானத்தை ரத்து செய்து விட்டு, கூட்ட பொருள் குறித்து விவாதிக்கலாம்.

ஸ்ரீநிகா, தி.மு.க.,: ஆண்டுக்கு 4 கூட்டங்கள் மட்டுமே நடத்தினால் மக்கள் பிரச்னைகளை எப்படி பேச முடியும்.

சாமுவேல், சுயே.,: கூட்டம் மாதம் ஒருமுறை கூட்டப்பட வேண்டும். மாநகராட்சி கமிஷனரின் அறிக்கை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மன்ற கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட வேண்டும்.

ரேணு நித்திலா, தி.மு.க.,: ரத்தினம் நகரில் 4 மாதங்களாக தண்ணீர் வராததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சசிகலா, தி.மு.க.,: ஜெ நகர், காளியப்பா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ராஜேஷ், ம.தி.மு.க.,: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக வழங்கப்பட்ட வாக்கி டாக்கி செயல்படாமல் முடங்கி உள்ளது.

கமிஷனர்: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 934 மனுக்களில் 650 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தமிழகத்தில் உள்ள 23 மாநகராட்சிகளில் சிவகாசி முதல் இடத்தில் உள்ளது.

ஸ்ரீனிகா தி.மு.க.,: வார்டுக்குள் வந்து மக்கள் பிரச்னைகள் நேரில் சந்தித்து தீர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் மேயர் பதவியில் இருக்கக் கூடாது வெளியே செல்ல வேண்டும்.

பெரும்பான்மையான கவுன்சிலர்கள் துாய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கவுன்சிலர்கள் அலைபேசியில் அழைத்தால் கமிஷனர் எடுப்பதில்லை. செங்குளம் கண்மாயில் கழிவுநீர் தேங்குகிறது. கூட்ட பொருளை முழுமையாக படிக்காததால், தீர்மானத்தை நிறைவேற்றாமல் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும், என்றனர். இதையடுத்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறிய மேயர் சங்கீதா கூட்டம் முடிந்ததாக அறிவித்தார். கூட்டம் பாதியில் முடிந்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us