கோவில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேர் மீது நடவடிக்கை
கோவில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேர் மீது நடவடிக்கை
கோவில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேர் மீது நடவடிக்கை
ADDED : ஜூன் 23, 2024 06:39 AM

சென்னை : தமிழகத்தில் கோவில்கள் பாதுகாப்பு, புனரமைப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், 2021 ஜூனில் தமிழக அரசுக்கு, 75 உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் விபரம்:
கோவில்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதல்களை வழங்க, தொல்லியல் துறை நிபுணர்கள், ஆகம நிபுணர்கள் அடங்கிய மாநில அளவிலான நிபுணர் குழு மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு கோவில்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
தணிக்கை குழு
கோவில்களில் உள்ள புராதன சிலைகள் சேதம், நிதி விவகாரங்கள் தொடர்பாக தேவைப்படும் நேரங்களில், அரசின் அனுமதியை பெற்று, மத்திய கணக்கு தணிக்கை குழுவை கொண்டு தணிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கோவில்கள் சொத்து குறித்து, அதிகாரிகள் 2021 ஜூன் முதல் இதுவரை 351 கோவில்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். நான்கு பறக்கும் படைகளும், இதுவரை 179 கோவில்களில் ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளன.
கோவில்கள் சீரமைப்பு, பாதுகாப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. கோவில்கள் பராமரிப்பு, விழாக்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு, கோவில் நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலின் உபரி நிதி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுதும் உள்ள 13,000 கோவில்களில், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியம், 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 - 24ம் ஆண்டில் கூடுதலாக 2,000 கோவில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, 17,000 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஜனவரி முதல் 2024 ஜனவரி வரை, கோவில்கள் திருப்பணிக்காக அரசு மானியமாக, 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் பராமரிப்புக்கு, 2024 - 25ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார். 17,962 கோவில்களில் நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடுகள் செய்யப்பட்டு, கோவில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
1,424 சிலைகள்
கடந்த 2021 மே முதல் 2024 மார்ச் வரை, 5,812 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6,324 ஏக்கர் நிலங்கள், 1,215 கிரவுண்ட் காலிமனை, 137 கிரவுண்ட் கோவில் குளங்கள், 186 கிரவுண்ட் பரப்பில் அமைந்துள்ள கட்டடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போன 1,424 சிலைகளில், 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சிலைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட 23 மையங்களில், 8,693 சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமரா, அலாரம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய உயர் பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, 1,842 அறைகள் கட்ட 'டெண்டர்' கோரப்பட்டது.
இதில், 1,833 அறைகள் கட்டுமானத்துக்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, 542 அறைகள் கட்டி முடிக்கப்பட்டன.
கோவில் சிலைகள் திருட்டு, சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்த விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.