'சிலை திருட்டு மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்'
'சிலை திருட்டு மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்'
'சிலை திருட்டு மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்'
ADDED : ஜூன் 02, 2024 03:50 AM

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை:
கடந்த ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி., இருந்த பொன் மாணிக்கவேல் நடவடிக்கையால், கடத்தப்பட்ட பல கடவுள் சிலைகள் மீட்கப்பட்டன. அந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.
மேலும், முறைகேடாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கும் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் நெருக்கமாகினர். பின், வழக்கு என்னவாயிருக்கும் என்பது குறித்து சொல்ல வேண்டியதில்லை.
போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட வேண்டிய தமிழகத்தின் சிலைகள், 2,000க்கும் மேல் உள்ளன என கூறி வருகிறார்.
ஆனால், அதை மீட்க ஹிந்து அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இதுவரை காணாமல் போன திருக்கோவில் சிலைகள் எவ்வளவு, அதற்காக சிலை தடுப்புப் பிரிவு போட்டுள்ள வழக்குகள் எத்தனை?
மேலும் காணாமல் போன, பல ஆயிரம் கோடி மதிப்பிலான மரகத லிங்கம் போன்றவை குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கோவில் சிலை களவு போவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன?
சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணாமல் போன வழக்கில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் வேட்டை தொடருவதாகச் சொல்லி விசாரணையை இழுத்தடித்தனர். இதேபோலத்தான் மற்ற வழக்குகளின் நிலையும்.
எனவே இதுவரை சிலை திருட்டு மற்றும் கடத்தல் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தி.மு.க., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு மவுனம் சாதித்தால், பக்தர்கள் ஆதரவோடு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
-நமது நிருபர்-