சட்டவிரோத கருக்கலைப்பு 6,720 மாத்திரைகள் பறிமுதல்
சட்டவிரோத கருக்கலைப்பு 6,720 மாத்திரைகள் பறிமுதல்
சட்டவிரோத கருக்கலைப்பு 6,720 மாத்திரைகள் பறிமுதல்
ADDED : செப் 26, 2025 01:42 AM
சென்னை:சட்டவிரோதமாக கருக்கலைப்புக்கு பயன்படுத்திய 6,720 மாத்திரைகளை, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி குருபாரதி கூறியதாவது:
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட தரணிதரன் செல்வம் என்பவர், நாமக்கல் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர், மருந்தாளுநர் உரிமம் பெறாமல், அதிக எண்ணிக்கையில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொள்முதல் செய்தது தெரிய வந்தது.
நாமக்கல் மருந்து ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் செய்த சோதனையில், பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. தரணிதரன் செல்வம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார்.
தேனியைச் சேர்ந்த சரவணன், சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜேஷ், சரவணன் ஆகியோருக்கு மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதற்காக, இம்மாத்திரைகளை அக்குழுவினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அவர்களிடமிருந்து, 6,720 மாத்திரைகள் பறிமுதல் செய்யபட்டன. அந்த நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தினால், அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதுடன், கரு முழுமையாக கலையாமல், உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, பொது மக்கள் உரிய விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.