Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கொடி கம்பங்கள் நடும் விவகாரம்: உத்தரவை மீறினால் அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள், கட்சிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

கொடி கம்பங்கள் நடும் விவகாரம்: உத்தரவை மீறினால் அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள், கட்சிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

கொடி கம்பங்கள் நடும் விவகாரம்: உத்தரவை மீறினால் அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள், கட்சிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

கொடி கம்பங்கள் நடும் விவகாரம்: உத்தரவை மீறினால் அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள், கட்சிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

UPDATED : டிச 04, 2025 04:17 AMADDED : டிச 04, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'எந்த அரசியல் கட்சியும், சாலைகளின் நடுவிலும், அருகிலும் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

'அதை மீறினால், அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுதும் அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக, தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைக்க வசூலித்த வாடகை; விதிகளை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து, 37 கலெக்டர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது:

சாலைகளின் நடுவில் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தும், சாலை நடுவில், 10 அடி உயரத்துக்கு கொடிகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன், கொடிக் கம்பம் விழுந்து, இரண்டு பேர் மரணம் அடைந்து உள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

சமீபத்தில், துணை முதல்வர் பிறந்த நாளை ஒட்டி, நீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்கள் அமைந்துள்ள சென்னை பசுமை வழிச்சாலையில் கூட, தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டன.

கொடிகளுக்கு முன்பணம் வசூலிக்க வேண்டும். முன்பணம் செலுத்தக் கூடிய நிலையில் தான் கட்சிகள் உள்ளன.

கட்சிகள் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைப்பது குறித்து, எந்த அதிகாரிகளும் கேள்வி கேட்பதில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயல்.

எனவே, சாலை நடுவிலும், அருகிலும் எந்த அரசியல் கட்சியும் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை, உறுதி செய்ய வேண்டும்.

இதை மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஜன., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us