கோழிப்பண்ணை நிறுவன அலுவலகங்களில் ' ஐ.டி. ரெய்டு'
கோழிப்பண்ணை நிறுவன அலுவலகங்களில் ' ஐ.டி. ரெய்டு'
கோழிப்பண்ணை நிறுவன அலுவலகங்களில் ' ஐ.டி. ரெய்டு'
ADDED : செப் 24, 2025 05:01 AM
உடுமலை; உடுமலை, நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் வீடு, அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சுகுணா புட்ஸ் கறிக்கோழி உற்பத்தி, விற்பனை, கறிக்கோழி ஏற்றுமதி, கோழித்தீவன உற்பத்தி ஆலைகள் உள்ளன. நேற்று காலை, வருமான வரித்துறை சிறப்பு பிரிவு கமிஷனர் பெர்ணான்டோ தலைமையில், 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதே போல், கோட்டமங்கலம் வரதராஜபுரத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலையில், துணைக்கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், 12 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். உடுமலை கணபதிபாளையத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலையிலும் சோதனை நடக்கிறது. இந்நிறுவன அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், காலை துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
நாமக்கல், எஸ்.ஜி., நகரை சேர்ந்தவர் வாங்கிலி சுப்ரமணியம், 62. இவர், 50 ஆண்டுகளாக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில், முட்டைக்கோழி, கறிக்கோழி பண்ணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் பல இடங்களில், பிராய்லர் கோழிப்பண்ணைகளை, 'இண்டகரேஷன்' முறையில் நடத்தி வருகிறார். மேலும், தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அவருக்கு சொந்தமான அலுவலகம், நாமக்கல் - திருச்சி சாலையிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிறது.
சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 10க்கும் அதிகமான கார்களில், 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை முதல், வாங்கிலி சுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு, நிதிநிறுவனம், அலுவலகங்களில் திடீர் சோதனை செய்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை அடுத்து, இந்த சோதனை நடந்து வருகிறது.