Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

ADDED : மே 28, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
சென்னை:'வடமேற்கு வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் இன்றும், நாளையும், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 26 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில், 13; கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 12; நீலகிரி மாவட்டம் குந்தா பாலம், தேனி மாவட்டம் தேக்கடியில் தலா, 11; தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதிகளில், தலா 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில், ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இன்று மிக கனமழை; திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில், ஒருசில இடங்களில், நாளை மிக கனமழை; திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் நிறைவு


பொதுவாக கோடையில், அக்னி நட்சத்திர காலத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த, 4ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த, 25 நாட்களில், தமிழகத்தில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், ஒருசில நாட்கள் மட்டுமே, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us