Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மலைமேல் செல்ல தடையால் போலீஸ்-குடியிருப்போர் வாக்குவாதம் 144 தடை உத்தரவால் பாதைகள் அடைபட்டதால் தவிப்பு

 மலைமேல் செல்ல தடையால் போலீஸ்-குடியிருப்போர் வாக்குவாதம் 144 தடை உத்தரவால் பாதைகள் அடைபட்டதால் தவிப்பு

 மலைமேல் செல்ல தடையால் போலீஸ்-குடியிருப்போர் வாக்குவாதம் 144 தடை உத்தரவால் பாதைகள் அடைபட்டதால் தவிப்பு

 மலைமேல் செல்ல தடையால் போலீஸ்-குடியிருப்போர் வாக்குவாதம் 144 தடை உத்தரவால் பாதைகள் அடைபட்டதால் தவிப்பு

ADDED : டிச 05, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். பாதைகள் அடைக்கப்பட்டதால் மலை அடிவாரத்தில் குடியிருப்போர் வெளியில் செல்ல முடியாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மாலையில் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் கோயில் சார்பில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி உச்சியில் உள்ள தீப துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்து ஏராளமான பக்தர்கள், பல்வேறு ஹிந்து அமைப்பினர் 16 கால் மண்டபம் அருகே காத்திருந்தனர். தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாததால் அவர்கள் மலை மேல் செல்வதற்காக மலை படிக்கட்டுகள் பகுதிக்கு சென்றனர். அங்கு போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் மலைமேல் செல்ல தடை விதிக்கப்பட்டது. மலைக்குச் செல்லும் பாதையின் முன் பகுதியில் மெயின் ரோட்டின் அருகே போலீசார் வழக்கம் போல் இரும்பு தடுப்புகள் அமைத்தும், பாதையின் பாதிவரை போலீஸ் வாகனத்தை நிறுத்தியும் மலைக்குச் செல்பவரை தடுத்தனர்.

போலீசாருடன் குடியிருப்போர் வாக்குவாதம் மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்ததால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. குடிநீர் வாகனம், குப்பை வாகனங்கள் வரவில்லை. அதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் தங்களுக்கு பாதை விடுமாறு கேட்டனர். அதற்கு போலீசார் மாற்றுப்பாதையில் செல்லுமாறு தெரிவித்தனர்.

பொது மக்களோ வேறு பாதை கிடையாது. இந்த ஒரு பாதை தான் உள்ளது. அதனால் பாதை வேண்டுமென போலீசாரிடம் கேட்டனர். போலீசார் மறுக்கவே அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்பு அப்பகுதியிலுள்ள வாகனங்களை பெரிய ரத வீதியில் நிறுத்திக் கொள்ளுமாறும், இரவு 7:00 மணிக்கு மேல் எடுத்து வரலாம் எனவும் கூறி அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் நடந்து சென்று வர போலீசார் அனுமதித்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், தெருக்களில் இருந்து வெளியில் செல்ல முடியாதபடி அனைத்து பகுதிகளிலும் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து அடைத்து விட்டனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் எப்படி செல்ல முடியும். வெளி நபர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது சரிதான். ஆனால் இந்த தெருக்களில் குடியிருக்கும் எங்களுக்கும் கட்டுப்பாடு விதித்தால் நாங்கள் எப்படி எங்களது இயல்பு வாழ்க்கையை வாழ முடியும். எங்களது வீடுகளை விட்டுவிட்டு தெருவிலா போய் குடியிருக்க முடியும்' என்றனர்.

12 பேர் கைது மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் அருகே உள்ள தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதாக திருப்பரங்குன்றம் ரகுநாத், திருமலை, விவேக், முத்துமுருகன், ஹிந்து முன்னணி நகர் துணை தலைவர் நாகராஜ், செயலாளர்கள் தினேஷ் குமார், தமிழரசு, பாலகிருஷ்ணன், விக்னேஷ் பாண்டியன், மணிகண்டன், ஸ்ரீனிவாசன், சத்தியமூர்த்தியை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்துவிசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us