கற்பனை செய்ய முடியாத துயரம்: விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மோடி வேதனை
கற்பனை செய்ய முடியாத துயரம்: விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மோடி வேதனை
கற்பனை செய்ய முடியாத துயரம்: விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மோடி வேதனை

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர், ''கற்பனை செய்ய முடியாத துயரம்'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, நேற்று 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' போயிங் 787 - டிரீம் லைனர் விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து வெடித்தது.
600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள், குடியிருப்போர் பலர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது, நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தற்போது வரை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விமான விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று ஆமதாபாத் வந்தார். அவர் விமான விபத்து நடத்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். விபத்து நிகழ்ந்த இடத்தில் நடந்து வரும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், விமான விபத்தில் உயிர்தப்பிய நபரையும் பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடி ஆலோசனை
விமான விபத்து குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, அவர் விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
வருத்தம் அளிக்கிறது!
இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கூறியதாவது: ஆமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டேன். பேரழிவு நடந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அயராது உழைக்கும் அதிகாரிகள் சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன்
எனது எண்ணங்கள் உள்ளன. விமான விபத்தில் நாம் அனைவரும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம்.
இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. துயரமடைந்த அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆறுதல்
விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்பாய் ரூபானி குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: குஜராத் முன்னாள் முதல்வர் ஸ்ரீ விஜய்பாய் ரூபானி ஜியின் குடும்பத்தினரை சந்தித்தேன்.
விஜய்பாய் நம்மிடையே இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. பல தசாப்தங்களாக நான் அவருடன் நண்பராக இருந்துள்ளேன். மிகவும் சவாலான சில காலங்கள் உட்பட, தோளோடு தோள் சேர்ந்து நாங்கள் ஒன்றாகப் பணியாற்றினோம். விஜய்பாய் பணிவானவர், கடின உழைப்பாளி, கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாக இருந்தார்.
பதவிகளில் உயர்ந்து, அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, குஜராத் முதல்வராக விடா முயற்சியுடன் பணியாற்றினார். ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பணியிலும், ராஜ்கோட் நகராட்சியில், ராஜ்யசபா எம்.பி., குஜராத் பா.ஜ., தலைவர் என பல்வேறு உயர் பதவிகளில் அவர் தன்னை தனித்துவமாகக் காட்டினார்.
குஜராத்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.