Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திறன் மிக்க இன்ஜினியர்கள் கிடைக்கும் மாநிலம் தமிழகம்: ஆனந்த் மகிந்திரா

திறன் மிக்க இன்ஜினியர்கள் கிடைக்கும் மாநிலம் தமிழகம்: ஆனந்த் மகிந்திரா

திறன் மிக்க இன்ஜினியர்கள் கிடைக்கும் மாநிலம் தமிழகம்: ஆனந்த் மகிந்திரா

திறன் மிக்க இன்ஜினியர்கள் கிடைக்கும் மாநிலம் தமிழகம்: ஆனந்த் மகிந்திரா

ADDED : ஜன 09, 2024 12:34 AM


Google News
சென்னை: ''தமிழகத்தில் அறிவுத்திறன் மிக்க இன்ஜினியர்கள் இருப்பதாலும், இங்கு தொழில் துவங்க, அனைத்து சாதகமான சூழல்களும் இருப்பதால், தொழில் துவங்க, தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது,'' என, தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறினார்.

தமிழக அரசு சார்பில், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், பிரபல தொழிலபதிரும், மகிந்திரா குழும நிறுவனங்களின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா பங்கேற்றார்.

முதலீட்டாளர்கள், மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

தொழில்துறை வளர்ச்சியில், தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக திகழ்கிறது. துறைமுகம், மின்சாரம், தரமான கல்வி, மனித ஆற்றல், தொழில்நுட்ப வளர்ச்சி என, அனைத்து அம்சங்களும் தமிழகத்தில் உள்ளன. இதை, நான் அனுபவ ரீதியாக சொல்கிறேன்.

கடந்த, 1990ம் ஆண்டுகளிலேயே தமிழகத்தில் மகிந்திரா நிறுவனம் தொழிலை துவங்கியது, இங்கு தொழில் துவங்க தேவையான நிலம், மின்சாரம், அரசின் ஒத்துழைப்பு என, அனைத்து உதவிகளும் கிடைத்தன. அதனால், இங்கே பல்வேறு புதிய புதிய தொழில்களை துவங்கி வருகிறோம்.

முதலில், சென்னையில் மகிந்திரா தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்தோம். பின்னர், எங்கள் போர்டு உறுப்பினர்களின் ஆலோசனைப்படி, மகிந்திரா வேர்ல்ட் சிட்டியை உருவாக்கினோம். இது, சிறப்பு பொருளாதார மண்டலமாக, அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை, மிகவும் சிறந்த மனித ஆற்றல் கிடைக்கிறது. குறிப்பாக இன்ஜினியரிங்கில் மிகச் சிறந்த அறிவு திறன்மிக்கவர்கள் இங்கு உள்ளனர். அரசு தரப்பிலும் எப்போதும் மிகவும் சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கிறது. அதனால், தொழில் துறையில் முதலீடுகள் செய்வதற்கு தமிழகம் எப்போதும், சிறந்த மாநிலமாக உள்ளது.

தற்போது வாகன உற்பத்தியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜன் வாகனங்கள் என, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதை கருத்தில் கொண்டு, எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில், புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் காலத்தில், அனைத்து சூழலுக்கும் ஏற்ற, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின்களுடன், உலக தரம் வாய்ந்த புதிய வகை வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.

எங்களை பொறுத்தவரை, சர்வதேச அளவில் எந்த நிறுவனத்தின் மாடலையும் காப்பியடிக்க மாட்டோம். எதையும் புதிதாக செய்யவே விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us